உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழந்த செய்தி ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா-மணிமேகலை. இத்தம்பதியின் மூத்த மகள் மகாலட்சுமி (10). சிறுமி மகாலட்சுமி, அடிக்கடி தன் பெற்றோரிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து, அதில் திண்பண்டங்கள் வாங்குவார் என்றும், இதனால், மகளை மணிமேகலை கண்டித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜன.6 அன்று தன் மாமா முருகன் வீட்டுக்கு சிறுமி சென்ற நிலையில், அங்கு 70 ரூபாயை திருடியதாக, முருகன் மணிமேகலையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, தண்டனையாக, சுடுநீரில் மிளகாய் பொடியை கலந்து நுகரச்செய்துள்ளார் மணிமேகலை. மேலும், சிறுமியின் வாய் மற்றும் தொடையில் சூடு போட்டுள்ளார்.
மிளகாய் பொடியை நுகர்ந்ததால் இரண்டு நாட்களாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த சிறுமி மகாலட்சுமி, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணிமேகலை கைது செய்யப்பட்டார்.
தங்கையை திருமணம் செய்ததற்காக நண்பனை கொலை செய்த அண்ணன்
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மனீஷ் மற்றும் விகாஸ் என்ற இருவர் நண்பர்களாகியுள்ளனர். இதில் விகாஸ் பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்ததற்காகவும் மனீஷ் பாலியல் வன்புணர்வு வழக்குக்காகவும் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளனர்.
முதலில் சிறையில் இருந்து வெளிவந்த விகாஸ் மனீஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் பிறகு அவரை விகாஸ் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். விகாஸின் தங்கையுடன் நட்பாக பழகிய மனீஷ் 10 மாதங்களுக்கு முன்பு அவரது தங்கை பூஜாவை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து விகாஸ் மனீஷை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பூஜாவும் மனீசும் டெல்லி சென்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு விகாஸை சந்திக்க வந்த மனீஷை விகாஸ் கொலை செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்கர் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் மனீஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விகாஸ் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறையினர் கூறினர்.