Site icon ilakkiyainfo

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி படுகாயம் அடைந்த 18 வயது நபர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர் வரிசையில் இருந்த நபர் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த போட்டியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற 18 வயதுடைய இளைஞர் ஜல்லிக்கட்டு பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து வந்துள்ளார்.

அப்போது திடீரென்று மாடு கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கிப் பாய்ந்து பாலமுருகனின் நெஞ்சுப் பகுதியில் முட்டியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு கடுமையான ரத்த இழப்பு ஏற்பட்டது.‌

உடனடியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரச சிகிச்சை மையத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலமுருகனின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாடிவாசலில் இருந்து வரும் காளைகளை உரிமையாளர்கள் பிடிக்கும் கடைசி இடத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவனியாபுரத்தில் நடைபெற்ற வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 60‌க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Exit mobile version