கோழி குஞ்சுகளைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் கோழியுடன் வந்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்காமன். இவர் தனது வீட்டில் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதனை வளர்க்க அவரது மகள் விசாகாவும் உதவியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கோழி ஒன்று முட்டையிட்டு குஞ்சு பொறித்தது.
கோழியை செல்லமாக பார்த்து பாதுகாத்து வந்திருந்தார் விசாகா. குஞ்சுகள் பிறந்த நாட்களே ஆன நிலையில், மர்மமான நிலையில் இறந்து கிடந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசாகா, இதுகுறித்து தந்தை கதிர்காமனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோழிக்குஞ்சுகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தந்தையுடன் தாய் கோழி மற்றும் இறந்து போன கோழிக்குஞ்சுகளுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சிறுமி, தாய் கோழிக்கு நீதி வேண்டும் எனக் கோரியும், தமது குஞ்சுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும் புகாரளித்துள்ளார்.
சிறுமியின் செயலை கண்டு நெகிழ்ந்து போன பொலிஸார் இது குறித்து விசாரணை செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.