வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல, உல்கந்த, பொரளுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆர்.எம். ஜயசுந்தர என்பவரை கொலை செய்துள்ளதாக அவரது 15 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செங்கல் சூளையொன்றுக்கு அருகில் செங்கல் குவியலில் விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல, உல்கந்த, பொரளுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆர்.எம். ஜயசுந்தர என்பவர் கடந்த 30 ஆம் திகதி செங்கல் சூளைக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் அவரின் மகன் மற்றும் அயலவர்களினால் ஹந்தபானாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் வெல்லவாய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மகனிடம் மேற்கொள்ளப்பட்ட. விசாரணைகளில் உயிரிழந்த நபரை செங்கல்லால் தான் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 30 ஆம் திகதி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்தை பறிக்கச் சென்றுள்ளதுடன் மகனையும் அங்கு வருமாறு கூறிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளார் .இருந்தபோதிலும் அங்கு உயிரிழந்த நபரின் மகன் சென்றிருக்கவில்லை. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த குறித்த சிறுவனின் தந்தை உளுந்து பறிக்க வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி மகனை திட்டிவிட்டு கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் மகனின் இடது கையிலுள்ள இரு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் சந்தேகநபரான மகன் செங்கல் சூளையிலிருந்த செங்கல் ஒன்றினால் தந்தையை தாக்கியதாக குறித்த சிறுவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.