இளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக்கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை.
அரசியலில், அப்படியோர் ஆர்வம்கொண்ட ‘2கே கிட்ஸ்’ மாணவியை வேலூர் மாநகரத் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. காகிதப்பட்டறைப் பகுதியை உள்ளடக்கிய 28-வது வார்டில்தான் அந்த சுவாரஸ்யம் அரங்கேறியிருக்கிறது.
தி.மு.க-வில், சத்துவாச்சாரி வடக்குப் பகுதி வட்டச் செயலாளரான குமார் என்பவரின் 22 வயது மகள் மம்தா குமார் என்பவர்தான் அந்த கவனம்பெற்ற வேட்பாளர்.
கலவை ஆதிபராசக்தி கல்லூரியில், பி.எஸ்சி வேளாண்மை நான்காம் ஆண்டு படித்துவருகிறார் மம்தா குமார். 28-வது வார்டில், யாதவர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கிறார்கள். மம்தா குமார் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ப்ளஸ்.
கல்லூரி மாணவி, 2கே கிட்ஸ் என்பதால் இளம் வாக்காளர்களையும் கவர்கிறார். விவசாயக் குடும்பம் என்பதும் அவருக்குக் கூடுதல் பலம்.
மம்தா குமாரின் தாத்தா தெய்வசிகாமணி முன்னாள் நகரமன்ற கவுன்சிலராக இருந்தவர். தி.மு.க-வின் நீண்டகால உறுப்பினராகவும் இருந்தவர் அவர்.
தந்தை குமாரும் தி.மு.க-வின் தீவிர விசுவாசிதான். 28-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தன் மகளைக் களமிறக்கியிருக்கிறார் குமார்.
“மூன்றாவது தலைமுறையாக தி.மு.க-வில் பயணப்படுவது குறித்துப் பெருமைப்படுகிறேன்.
இன்னும் இரண்டு மாதங்களில் கல்லூரிப் படிப்பு முடிந்துவிடும். மாணவியாக இருந்து… அரசியலைக் கற்றுள்ளேன்.
மக்கள் பிரதிநிதியாக சேவையாற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிப்பார்கள்” என்று நம்பிக்கைகொள்கிறார் மம்தா குமார்.