கவுன்சிலர் சீட் கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாநகராட்சி 188-வது வார்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
ரத்த வெள்ளத்தில் போராடிய செல்வத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து தி.மு.க.வினர் மற்றும் செல்வம் ஆதரவாளர்கள் அப்பகுதியில் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.