இந்தியாவில் மலை இடுக்கு ஒன்றில் 40 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக்கொண்டிருந்த இளைஞர் இந்திய இராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று தனது மூன்று நண்பர்களுடன் மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து, இராணுவத்தினர் அவரை மீட்கும் பணியில் நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர், பாபுவை மீட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், பாபு இந்திய இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, ‘பாரத மாதா கி ஜே’ என்று உற்சாகமாக கோஷமிட்டுள்ளனர்.