கம்பஹா மாவட்டம் – படல்கம பகுதியில் பெற்றோரின் மூட நம்பிக்கையினால் 10 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவயது முதல் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த மலீஷ துலக்ஷன என்ற சிறுவனை மத வழிபாடுகளினால் குணப்படுத்த முயன்ற பெற்றோரால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை படல்கம பொலிஸ் பிரிவில் ஆண்டிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமாக துர்மணம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதற்கமைய குறித்த வீட்டில் காணப்பட்ட கட்டிலொன்றில் 10 வயதுடைய சிறுவனொருவன் இறந்த நிலையில் காணப்பட்டமை இனங்காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த சிறுவன் கடந்த 7 ஆம் திகதி காலை தொண்டை நோய் காரணமாக சுகவீனமடைந்துள்ளார்.
இதனை குணப்படுத்துவதற்காக குறித்த சிறுவனின் பெற்றோர் அவர்களுக்கு காணப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் தொடர்ந்தும் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கின்றனரே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகயீனமடைந்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும் , பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு , விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.