மன்னார் – மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில், அண்மையில் இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றிலும் உயர் தர பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் உயர் தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை இடம்பெற்றது.
இதன் போது மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையின் அதிபரின் மகன் அதே பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பாடசாலை அதிபரின் மகன் கணித பாட பரீட்சையின் போது பரீட்சை மண்டபத்தினுள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி அதற்கான விடையை குறித்த ஆசிரியர் மீள பெற்று குறித்த மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் குறித்த வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிக் கொண்டிருந்தார்.
இதன் போது குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சை கடமையில் ஈடு பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.
உடனடியாக குறித்த ஆசிரியர் அந்த மாணவனை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மற்றும் அடம்பன் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
உடனடியாக அந்த பரீட்சை மண்டபத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்துடன் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.