>யாழ். பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் கடந்த மாதம் 31 ஆம் திகதி 23 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கநகைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நகைகளை கொள்ளையிட்ட சந்தேகநபர் ஒருவரும் , அவற்றை அடகு வைத்த சந்தேகநபர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்துள்ளனர். அத்தோடு கொள்ளையிடப்பட்ட நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகைகளில் பொன்தாலிக்கொடியொன்றுடன் 4 தங்கசங்கிலிகள், 6 தங்கமோதிரங்கள், 5 தங்ககாதணிகள், 2 தங்கவளையல்கள், 2 தங்கநாணயங்கள், 2 தங்கபதக்கங்கள், 1 பஞ்சாயுதம் மற்றும் 2 தங்கமுலாம் என்பவை அடங்குகிறது.
இவற்றை அடகுவைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 25, 27 வயதான வேலணை மற்றும் சுன்னாகம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.