சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டுங்கள் என்றும் கூறிய ஜெயக்குமார் பின்னர் அந்த நபரிடம் சட்டையை கழற்றுமாறு கடுமையாக பேசும் காட்சி இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
‘
இதையடுத்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த நபரிடம் ஜெயக்குமார், “வேறொரு வார்டில் இருந்து வந்த உனக்கு இங்கு என்ன வேலை? திமுகவில் எத்தனை கள்ள ஓட்டு போட்டாய்?” என்று கேட்கும் காட்சி காணொளியில் உள்ளது.
19.02.22 ராயபுரம்,49வது வார்டு பூத்தில்,சமூக விரோதிகளுடன் கள்ள ஓட்டு போட முயன்ற #திமுக நபரை தடுத்ததால், அந்த நபர் காவல்துறை & கழகத்தினரை தகாத வார்த்தை பேசி,கல்லெறிந்து,அராஜகத்தில் ஈடுபட்டார்.அதே நபர் 49வது வார்டில் வேறு பூத்தில், #திமுக வினரிடம் சேர்ந்து கள்ள ஓட்டு போட முயன்றார். pic.twitter.com/LJU6yAKxXk
— DJayakumar (@offiofDJ) February 20, 2022
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் பகுதி, பகுதியாக ஊடகங்களில் வெளியாயின. அதே சமயம், ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற செயலை திமுகவினர் கடுமையாக கண்டித்தனர்.
இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையை தூண்டுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்பட 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, தன்னை காவல்துறையினர் கைது செய்ய வந்ததை அறிந்த ஜெயக்குமார், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். அதில், கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்துக் கொடுத்த என் மீதே வழக்கா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடிச்சு கொடுத்ததற்கு என்மீதே வழக்கா..?
திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு…
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே… pic.twitter.com/ZJAiKTrV1j
— DJayakumar (@offiofDJ) February 21, 2022
ஜெயக்குமாரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் இரவு 10 மணி வரையிலும் அந்த காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படவில்லை.
இந்த நிலையில், ஜெயக்குமார் கைது பற்றிய தகவலறிந்த அதிமுகவினர் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக பெருமளவில் திரண்டனர். அங்கு அவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி அதிமுக எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மேலிடத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சலசலப்புகளை கண்டு அஞ்சும் இயக்கம் அதிமுக கிடையாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை, அதிமுகவின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது. pic.twitter.com/tX8kQotXyj
— AIADMK (@AIADMKOfficial) February 21, 2022
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டபோது அவர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரை கைது செய்ய சுமார் 40 பேர் கொண்ட காவல்துறையினர் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்ததாகவும் இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் ஜெயவர்தன் குற்றம்சாட்டினார்.
இதேபோல, தனது கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக ஜெயக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி தெரிவித்தார். தனது கணவரை தனியாக அழைத்துச் சென்றிருப்பதால் அவரை என்ன செய்வார்கள் என்ற அச்சத்தில் தாம் இருப்பதாக ஜெயக்குமாரி கூறினார்.
— Dr.J Jayavardhan MBBS, M.D., (@DrJJayavardhan) February 21, 2022
இந்த நிலையில், தனது தந்தையை காவல்துறையினர் கைது செய்யப்பட்ட காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் எம்.பி ஜெயவர்தன் பகிர்ந்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் தன்னை தாக்கியதாக ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதனும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் திமுகவைச் சேர்ந்த சிலர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. அதற்கு முந்தைய நாள் இரவில் எதிர்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவ