- கார்கிவ் – யுக்ரேனின் இரண்டாவது நகரம். இங்கு ரஷ்ய படையினர், பிராந்திய அரசாங்கத்தின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
- யுக்ரேன் அதிபர் இந்த தாக்குதலை “அரசு பயங்கரவாதம்” என்று அழைத்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்பால் குடியிருப்பு பகுதிகள் தாக்கப்பட்டு 16 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்ட ரஷ்யாவின் செயல், போர்க்குற்றம் என்று வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
- ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, யுக்ரேன் தொடர்ந்து தமது மன உறுதியில் உறுதியாக இருக்கும் என்றார். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக விரைவில் தமது நாடு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
- வடகிழக்கு நகரமான ஓக்டிர்காவில் ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் 70 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- யுக்ரேன் தலைநகர் கீவை நோக்கி ரஷ்ய கவச வாகனங்களின் பெரும் தொகுப்பு முன்னேறி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
- ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப், அணு ஆயுதங்களை வாங்கும் யுக்ரேனின் முயற்சியை தடுக்கவே அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் காணொளி காட்சி வழியாக பேசினார்.
- ரஷ்யாவின் செயல்பாட்டை “காட்டுமிராண்டித்தனமான மற்றும் கண்மூடித்தனமான” தாக்குதல் நடவடிக்கை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தீவிரப்படுத்த தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கீயவில் உள்ள இலக்குகளை தாக்குவோம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
யுக்ரேன்
யுக்ரேன் தலைநகரில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அந்த கட்டடங்கள் அருகே வாழும் குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில், ரஷ்ய படைகள் ‘யுக்ரேனிய பாதுகாப்பு சேவையின் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கீயவில் உள்ள 72வது முக்கிய நடவடிக்கை மையத்திற்கு’ எதிராக ‘உயர் துல்லிய தாக்குதல்” நடத்த தயாராகி வருகின்றன.
எனவே ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை மேற்கொள்ள தேசியவாதிகளால் பயன்படுத்தப்படும் யுக்ரேனிய குடிமக்களும் தாக்குதல் இலக்கு பகுதிகளுக்கு அருகே வசிக்கும் கீயவ் குடியிருப்புவாசிகளும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறுங்கள் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரஷ்யாவிற்கு எதிரான தகவல் தாக்குதல்களைத் தடுக்க” இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.