பெலாரஸ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 8வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்கள் நாட்டை பாதுகாக்க ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்புக் கொண்டார். அதன்படி உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே திங்கட்கிழமையன்று முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த அமைதி பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீட்டித்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. முடிவு எதுவும் எட்டப்படாமலேயே அந்த பேச்சுவார்த்தை முடிந்து போனது.
இந்நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக தங்கள் நாடு மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.
உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் இன்று சென்றடைந்தனர்.
ரஷ்யாவின் சார்பில் அதிபர் புதினின் உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி ரஷ்ய தூதுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை பெலாரசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
உக்ரைனில் உள்ள மக்களின் அமைதியான வாழ்க்கை மீண்டும் திரும்பும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.
இருநாட்டு தரப்பும் சில முக்கிய விவகாரங்களில் இறங்கி வர வாய்ப்புள்ளதால் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.