உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. உக்ரேனில் விமான நிலையங்கள் எண்ணெய் கிடங்குகள் பாடசாலை கட்டிடங்கள் மருத்துவமனைகள் அணுமின் நிலையம் துறைமுகங்கள் எனப் பல உட்கட்டமைப்புகளும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
கொரோனா என்ற கொடூர வைரஸின் தாக்கம் உலகை ஸ்தம்பிக்க வைத்தபோது இயற்கை தன்னை மீள் உருவாக்கம் செய்துகொண்டது போல மனிதர்களிடத்திலும் அன்பு பெருக்கெடுத்து மரித்துப்போன மனிதம் எல்லாம் மீண்டும் துளிர்விடுவதாக நினைத்தோம். இனி சமாதானமும் அமைதியும் இந்த பூமியை ஆர்ப்பரிக்கும்.
மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்களுக்கு கொடுப்பர். போட்டி பொறாமை ஆசைகள் வன்முறைகள் இனி இந்த பூமியில் இருக்காது.
ஒவ்வொரு மனிதனும் சக மனிதனை நேசித்து வாழ்வர் என்று நினைத்தோம். ஆனால் இயற்கை எத்தனை பாடத்தை கற்பித்தாலும் மனிதர்கள் திருந்தபோவதில்லை.
சில மனிதர்களின் பேராசை அவர்களை சாத்தான்களாக்கி மனித இனத்தை அழிக்க துடிப்பதை இன்று பார்க்கிறோம்.
எத்தனையோ பேராசை கொண்டு சக மனிதர்களை அடிமைகளாக்கி மொத்த பூமியை அதிகாரத்தினால் ஆண்டவர்களின் கல்லறைகள் கூட இன்று காட்சிக்கு இல்லை என்பதனை அறிந்தும் இன்னும் மண்ணாசை பொண்ணாசையில் மற்றவர்களை துன்புறுத்தி மகிழும் சில சாத்தான்கள் மனித உருவில் வாழ்கின்றன.
அதற்கு சாட்சியாக இன்று உலகின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கிறது உக்ரைனில் அழுகுரல்கள்.
யுத்தம் அதன் வலிகள் ரணங்கள் எத்தனை கொடுமையானது என்பதனை உணர்ந்தவர்கள் நாம். இன்னும் மாறாத அந்த ரணத்தை அனுபவிப்பவர்கள் நாம் என்பதால் உக்ரைனின் வலியை எம்மால் உணரமுடிகிறது.
எதற்காக புட்டின் இத்தனை மனித உயிர்களை பலியாக்குகிறீர்கள். இரத்த காடாக உக்ரைனை மாற்றி தலைநகரத்தை நரகமாக்கி மகிழ்கிறாயே. நிறுத்து போரை என்ற குரல்கள் சீனாவை தவிர உலகின் எல்லா மூலையில் இருந்தும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த யுத்தத்தின் பின்னணியில் அமெரிக்காவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இழப்பு என்பது அப்பாவிகளுக்குதான்.
இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்துக்கொண்டிருக்கிறது போர். இந்த நிலையில் தெற்கு உக்ரேனின் எனர்ஹோடர் நகரில் உள்ள ஜேபரோஜையா அணுமின் நிலையம் மீது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.
இதில் ஜேபரோஜையாவிலுள்ள அணுமின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பியாவிலேயே மிக பெரிய அணுமின் நிலையமாகும்.
உண்மையில் எதற்காக இந்த போர் வெறி . உக்ரேனை புட்டின் வீழ்த்தி தனக்கு கீழே கொண்டுவர நினைக்கிறாரே இதற்கு என்ன காரணம்.
உக்ரேன் (Ukraine) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. உருசியாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரேன் உருசியாவுடன் கிழக்கேயும் வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
உக்ரேன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரேன் எனப்பிரிக்கிறது.
உக்ரேன் வடக்கே பெலருசுடனும்; மேற்கே போலந்து சிலோவாக்கியா அங்கேரி உடனும்; தெற்கே உருமேனியா மல்தோவா உடனும்; கரையோரமாக அசோவ் கடல் கருங்கடல் உடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.
உக்ரேனின் பரப்பளவு 603,628 km2 (233,062 sq mi) ஆகும். இஜடிஸ இது ஐரோப்பாவில் 8-ஆவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாகும். இதன் தலைநகர் கீவ். இதன் ஆட்சி மொழி உக்ரேனியம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.
17-ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் உக்ரேனிய-கொசாக் பேரரசு தோன்றி செழித்தது. ஆனாலும் அதன் பகுதிகள் இறுதியில் போலந்து உருசியப் பேரரசுக்கிடையில் பிரிக்கப்பட்டது. 1917 உருசியப் புரட்சியின் பின்னர் உக்ரேனியத் தேசிய இயக்கம் உருவானது.
1917 ஜன் 23 இல் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட உக்ரேனிய மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1922 இல் உக்ரேனிய சோவியத் சோசலிசக் குடியரசு உருவாகி சோவியத் ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆனது. சோவியத் ஒன்றியம் 1991 இல் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து உக்ரேன் தனிநாடாக விடுதலை அடைந்தது.
இந்நிலையில் தனது பாதுகாப்பை கருதி உக்ரேன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய நினைத்ததுதான் தற்போது நடைபெறும் இந்தப் போருக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் நேட்டோ படைகளும் தற்போது உக்ரேனைக் கைவிட்டுவிட்டதால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவருகிறது உக்ரேன்.
ஆரம்பகட்டத்தில் ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் நிறுத்தியபோது பதிலுக்கு நேட்டோவும் தனது படைகளை போலந்து ஹங்கேரி ருமேனியா ஆகிய ரஷ்யாவின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியது.
கடந்த மாதம் 24-ஆம் திகதி சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது.
போர் தொடங்கிய பிறகு நேட்டோ படைகள் உக்ரேனுக்கு உதவ முன்வரவில்லை. நேட்டோ படைகள் உதவிக்கு வராதது ரஷ்யாவுக்குப் பெரும் சாதகமாகிவிட்டது.
உக்ரேன் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என உக்ரேன் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கைகளும் பயனற்று போயுள்ளது.
இதற்கு காரணம் உக்ரைன் வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் அது நேரடி யுத்ததpற்கும் ரஷ்யாவின் எதிரிகளாகவும் பார்க்கப்படுவர் என்று ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
எனவே இது ஐரோப்போ முழுவதிலும் போர் சூழலை உருவாக்கிவிடும் என நாடுகள் அச்சப்படுகின்றன. ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்ற அச்சமும் நிலவுகின்றது. இதனால்தான் உக்ரேன் வான் பரப்பிற்கு தடை விதிக்க முடியவில்லை. நேட்டோவும் மோத விருப்பமின்றி இருக்கின்றது.
உக்ரேன் எங்களது நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்ல; அதனால் எங்கள் படைகளை உக்ரேனுக்குள் அனுப்ப முடியாது. எங்களது உறுப்பு நாடுகளான போலந்து ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள்மீது ரஷ்யா கைவைத்தால் திருப்பி அடிக்கத் தயங்கமாட்டோம்’ என்றிருக்கிறது நேட்டோ.
நேட்டோ படைகளும் அமெரிக்காவும் தங்களது நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற தைரியத்தில்
வலிமையான படைபலம்கொண்ட ரஷ்யாவுக்கு எதிராகச் சவால்விட்டு வந்தார் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. ஆனால் தற்போது யாருடைய உதவியும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கிறது உக்ரேன்.
வரும் நாட்களில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்தாலும் நேட்டோ நாடுகளின் படை உக்ரேனுக்கு ஆதரவாகப் போர்க் களத்தில் இறங்காது என்றே சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதை உக்ரேன் அரசு அந்நாட்டு மக்களின் துணையுடன் எதிர்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வரும் உக்ரேன் மீதான தாக்குதல் காரணமாக உக்ரைனில் வசித்து வரும் வெளிநாட்டினரும் அகதிகளாக அந்நாட்டு மக்களும் உக்ரேனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளின்மீது அமெரிக்க தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருவதால் ரஷ்யாவின் வல்லரசு அந்தஸ்துக்குப் பாதிப்பு உண்டாகிவிடுமோ என்ற அச்சம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் இருக்கக்கூடும்.
ஏற்கனவே சோவியத் யூனியனிலிருந்த லித்துவேனியா எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்டன.
மீதமிருக்கும் சோவியத் நாடுகளும் நேட்டோவில் இணைந்துவிட்டால் உலக அரங்கில் ரஷ்யா பின்னுக்குத் தள்ளப்படும் என புட்டி ன் அஞ்சுவதாகத் தெரிகிறது.
எனவே உலக அரங்கில் ரஷ்யாவின் பலத்தை நிலைநாட்டவே இந்தப் போர் முடிவை புட்டின் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும்;’’ ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க முயல்கிறார். அவரது இந்த எண்ணம் உலக நாடுகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கும்;’” என்றிருக்கிறார்.
இந்தப் போரின் மூலம் சோவியத் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நாடுகளுக்கு அச்சத்தை ரஷ்யா ஏற்படுத்த கூடும்.
இதன் மூலம் உலக அரங்கில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகும் என புட்டின் நம்புவதாக கூறப்படுகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட உ லக நாடுகள் அனைத்து மீதும் விரோதமான போக்கை கடைப்பிடிக்கும் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது.
கொரோனா வைரஸை பரப்பியதாக உலக நாடுகள் சீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் சீனா கடுமையாக அதனை எதிர்த்து வருவதோடு தனது பட்டுப்பாதை திட்டத்தையும் நடைமுறைபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் சீனா ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பதால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் தருவதற்காகவும் இந்தப் போரை பயன்படுத்திக்கொள்வார் புட்டின்.
அடுத்ததாக மீண்டும் சோவியத் யூனியனைக் கட்டமைக்கும் பணியைக்கூட ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மேற்கொள்ளலாம்” என்றும் கூறப்படுகின்றது.
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர்
இந்நிலையில் இதுவரை நேட்டோவிடம் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று தொடர் கோரிக்கைகளை முன்வைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இனியும் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்துக்காக போராடப்போவதில்லை. இந்த விடயத்தில் மண்டியிட்டு கெஞ்சும் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் ஓடி ஒளியவும் இல்லை யாருக்கும் அஞ்சவும் இல்லை” எனத் தெரிவித்து தனது அலுவலகத்தில் இருந்து காணொளி ஒன்றை உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெலன்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பேசியிருந்தார்.
அதில் அவர் ” நான் தலைநகர் கீவ் நகரில் தான் இருக்கிறேன். நான் ஓடி ஒளியவும் இல்லை. யாருக்கும் அஞ்சவும் இல்லை. பொதுவாக திங்கள்கிழமைகளை கடினமான நாள் என்பார்கள். போர் நடக்கும் ஒவ்வொரு நாளும் கடினமான நாளே. அவை அனைத்தும் திங்கள் கிழமைகளே.
ஒவ்வொரு நாள் போராட்டமும் ஒவ்வொரு நாள் உயிர் பிழைத்திருப்பதும் நமக்கான உன்னதமான தருணங்கள். நமது இந்த உறுதி போருக்குப் பின்னர் ஓர் அமைதியான வாழ்க்கையை நமக்குத் தரும்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலைதொடர்ந்து எதிர்த்து வரும் ஒவ்வொரு உக்ரேனின் ஆண்களும் பெண்களும் ஹீரோக்களே.
நம் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி நமது எதிரிகள் அதனை தடம் தெரியாத அளவிற்கு அழித்து வருகின்றனர்.
நம்மை அவர்களால் அழிக்க முடியாது. நமது நகரத்தை நாம் மீண்டும் உருவாக்குவோம். அது ரஷ்யாவின் எந்த ஒரு நகரத்தைவிட சிறப்பானதாக இருக்கும்” என்று அவர் பேசியுள்ளார்.
இந்நிலைளில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியனவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பைடன் உக்ரைன் போர் ரஷ்யாவுக்கு வெற்றி தராது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்த ஆண்டு இறுதியிலிருந்து நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
ஆயினும் உக்ரைனுக்கு MiG -29 போர் விமானங்களை அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து அனுப்ப வேண்டும் என்ற போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இது நேட்டோ கூட்டமைப்புக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்று அமெரிக்கா விளக்கியுள்ளது.
மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் உக்ரேனுக்கு 500 மில்லியன் யூரோ வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதுவரை உக்ரைனிலிருந்து 2 மில்லியன் மக்களை அகதிகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிட்ச் ரேட்டிங்க்ஸ் என்ற சர்வதேச நாணய மதிப்பீட்டு நிறுவனமானது ரஷ்யாவின் நாணய மதிப்பீட்டை பி தரத்தில் இருந்து சி யாக குறைத்துள்ளது.
மெக்டொனாஸ்ல்ட்ஸ், கோகோ கோலா, ஸ்டார்பக்ஸ் ஆகிய உணவு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் செயல்பாட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உக்ரேனிலிருந்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு 12 நாட்களில் 20 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், முதியோராவர்.
உக்ரேன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் எத்தனை எத்தனை தடைகளை விதித்தாலும் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் முன்னேறி வருகிறது
புட்டினின் போர் தேவையற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்களைப் பறிக்கிறது. புட்டின் இரக்கமின்றி அப்பாவி மக்களை பாடசாலைகளை மருத்துவமனைகள் குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார். புட்டின் கொலைகார பாதையை தேர்வு செய்து பயணிக்கிறார்” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா நீண்ட போரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் “போர் விமானங்களை வழங்கப்போவதில்லை இராணுவ வீரர்களை அனுப்பப்போவதில்லை. ஆனால் உக்ரேன் மக்களின் துணிச்சலுக்கு தலைவணங்கி அவர்கள் ரஷ்ய தாக்குதலை அடக்குமுறையை வன்முறையை எதிர்கொள்ள உதவுவோம் என்று” ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் உக்ரைனை கைவிட்டாலும் அந்நாட்டு ஜனாதிபதி தனது நாட்டுக்காகாகவும் மக்களுக்காகவும் நேரடியாக இராணுவ உடையில் மக்கள்; துணையோடு பலமிக்க ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகின்றார்.
இனி தான் யாரிடமம் மண்bயிடப்போவதில்லை. தான் இறந்தாலும் நாட்டு மக்கள் நாட்டுக்காக தொடர்ந்து போராடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஆம் உண்மையில் ரஷ்யாவின் குறி உக்ரைன் ஜனாதிபதிதான். அவரை கொன்றால் ரஷ்யா யுத்தத்தில் வெற்றிப்பெற்றதாக ஆகிவிடும்.
ஆயினும் தொடர்ந்து பலமிக்க ரஷ்யாவை நாட்டு மக்கள் துணையோடு உக்ரைன் ஜனாதிபதி எதிர்த்து வருகின்றார். இதனை பார்க்கும் போது மெய் சிலிர்க்கதான் செய்கிறது.
அந்த மக்களுக்காக அவர் உயிருடன் இருக்க வேண்டும்;. இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
உறவுகளை பிரிந்தும் இழந்தும் மக்கள் துன்பத்தில் தவிக்கின்றனர். இந்த நிலைமைகள் மாற வேண்டும். உக்ரேனில் மீண்டும் அமைதி திரும்பிட பிரார்த்திப்போம். யுத்தம் இல்லா பூமியை உருவாக்கிட உலக நாடுகள் முயற்சிக்கட்டும்.