கோவையில் உள்ள அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் எஸ்.பி வேலுமணி, அவருடைய சகோதரர் அன்பரசன், அன்பரசன் மனைவி பிரேமலதா உட்பட பத்து பேர் மற்றும் மகா கணபதி ஜுவல்லர்ஸ், கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் என்கிற மூன்று தனியார் நிறுவனங்களின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை எஸ் பி வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த காலகட்டத்தில் அவர் தன் பெயர், தன் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் ரூ.58,23,97,052 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இது இவர் கணக்கில் காட்டியுள்ள வருமானத்தைவிட 3,920% அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் எஸ்.பி வேலுமணி, அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த ஐந்தாண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்ததை வைத்து சொத்துக்களை வாங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளிலும் இவர்கள் சொத்துக்கள் வாங்கி இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது.
அவர் அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை 60க்கும் மேற்பட்ட இடங்களில் அப்போது சோதனை நடத்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது இது இரண்டாவது முறை.
இன்று கோவை மாவட்டத்தில் உள்ள 41 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை நடைபெற்றது.
கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி வேலுமணி இல்லத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நடைபெற்றது.
சோதனை தொடர்பான தகவல் வெளியானவுடன் எஸ்.பி வேலுமணி இல்லம் முன்பாக அதிமுகவினர் திரண்டனர்.
இன்று கோவையில் எஸ்.பி வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமலை சண்முகம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
அதோடு எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்களின் இல்லங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
அதுபோக அதிமுக ஆட்சியில் கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த அனிதா, டி.எஸ். பி சண்முகம், காவல் ஆய்வாளர்கள் லோகநாதன் மற்றும் சந்திரகாந்தா உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது .
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி அன்பழகன், செங்கோட்டையன், சி.வி சண்முகம், கே.சி.கருப்பண்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் எஸ்.பி. வேலுமணி இல்லத்திற்கு வருகை தந்தனர்.
இன்று 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 11 கிலோ தங்கம் 118 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் ரூபாய் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
சோதனை முடிவில் எஸ்.பி வேலுமணியின் இல்லத்திலிருந்து ஒன்பது முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி “திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த வழக்கைப் பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.
என்மீது மட்டுமல்லாமல் எனது உறவினர்கள் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களின் மீதும் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். இன்று நடைபெற்ற சோதனையில் அவர்கள் எதையுமே கைப்பற்றவில்லை. நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம்” என்றார்.
எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – பின்னணி என்ன?
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலுமணி விவகாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது சோதனையாகும்.
கோயம்புத்தூரின் மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரக ஆய்வாளர் எழிலரசி பதிவு செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
சோதனை ஏன் ?
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன், உறவினர் சந்திரசேகரன் மற்றும் நண்பர்கள் 10 பேர் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூலமும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளசொத்துக்கள், நகை உள்ளிட்டவற்றை சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ வீடுகளில் சோதனை
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மட்டுமின்றி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஜெயராமன், வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த அனிதா, டி.எஸ். பி சண்முகம், காவல ஆய்வாளர்கள் லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
காவல்துறையில் பணியாற்றி வரும் 2 ஆய்வாளர்கள், ஏ.டி.எஸ்.பி., டி எஸ்பி ஆகிய 4 அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதரவாளர்களுக்கு உணவு – காலாவதியான குடிநீர்?
சோதனை நடைபெறுவதையடுத்து வேலுமணி வீட்டிற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை தேநீர், பொங்கல், கிச்சடி மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்படுகின்றன.
அப்பகுதியில் வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சென்னை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் விவரம்:
1) எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்
2) பி. அன்பரசன், வேலுமணியின் சகோதரர் மற்றும் செந்தில் அண்ட் கோ கூட்டாளி
3) ஹேமலதா, செந்தில் அண்ட் கோ கூட்டாளி
4) ஆர். சந்திரசேகர், ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம்
5) சந்திரபிரகாஷ், பங்குதாரர்-கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம்
6) ஆர். கிருஷ்ணவேணி, முன்னாள் பங்குதாரர் – கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்
7) கே. சுந்தரி, முன்னாள் பங்குதாரர் – வரதன் இன்ஃப்ரா ஸ்ட்ரசர்
8) ஹெச். கார்த்திக், முன்னாள் பங்குதாரர் – கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்
9) ஜே. விஷ்ணுவர்தன், முன்னாள் பங்குதாரர் – கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்
10) எஸ். சரவணகுமார், முன்னாள் பங்குதாரர் – கோன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா நிறுவனம்
11) மகா கணபதி ஜுவல்லர்ஸ்
12) கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம்
13) ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம்
இது தொடர்பான விரிவான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.