“பூமியில் ஒரு நரகம்”. யுக்ரேனின் மேரியோபோல் நகரத்தைச் சேர்ந்த எம்.பி யாரோஸ்லாவ் ஸெலெஸ்னியாக் அங்கு நிலவும் சூழல் குறித்து இப்படித்தான் விவரித்தார்.
மேரியோபோல் நகரம் ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதனால், மனிதநேய உதவிகளை அங்கு சென்று சேர்ப்பதற்கான வழித்தடத்தை அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், தண்ணீர், வெப்பமூட்டும் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளின்றி சுமார் 3,00,000 பேர் அந்நகரத்தில் சிக்கியுள்ளனர்.
உணவு மற்றும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை மிகவும் மோசமடைந்து, மக்கள் பசி மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யப் படைகள் அந்நகரத்தில் தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று வழிகளிலும் இடைவிடாத தாக்குதலை தொடர்ந்து வருவதால், மக்கள் பெரும்பாலான நேரத்தை பதுங்கு குழிகளிலேயே கழிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நகரம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன. அந்நகர மேயர் வாடிம் போய்ஷென்கோ, 80% குடியிருப்பு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன எனவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக, கடந்த வாரம் என்னிடம் தெரிவித்தார்.
இறந்தவர்களின் சடலங்களை பெறுவது மிகவும் ஆபத்தானது என்பதால், அவை சாலைகளில் விடப்படுள்ளன.
இறுதியில் அச்சடலங்களை பெற முடிந்தாலும், அவை மொத்தம் மொத்தமாக புதைக்கப்படுகின்றன, இது மற்றுமொரு அச்சத்தின் அடையாளமாக உள்ளது.
ரஷ்ய ராணுவ ஜெனரல் ஒருவரும், அந்நகரத்தில் ஏற்பட்டுள்ள மனிதநேய பேரழிவு குறித்து ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆச்சர்யத்திற்கு இடமின்றி, அவருடைய சொந்த படைகள் தான் இதற்கு காரணம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை