யுக்ரேன் – ரஷ்யா போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் கூடினர்.
இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, “யுக்ரேன் பல ஆண்டுகளாக போரை நடத்த விரும்பவில்லை. நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.
மாநாடு நிறைவடைந்த நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவித்தார்.
தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக யுக்ரேன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் யுக்ரேன் மக்களுடன் துணைநிற்கிறோம்” என அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
“நேட்டோ பாதுகாப்பு திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளோம். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படையின் 40,000 துருப்புகளை நிறுத்தியுள்ளோம்,” என, நேட்டோ நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு புதிய படைக்குழுக்கள் அனுப்பப்படும் என, யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் முன்னதாக அறிவித்திருந்தார்.
யுக்ரேனுக்கு உதவுவதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் யென்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
உயர் தயார்நிலையுடன் கூடிய அதிகளவிலான படைகள் கிழக்குப்பகுதியில் நிறுத்தப்படும் எனவும், வான் தளத்தில் அதிக ஜெட் விமானங்களும், கடல்வழி பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ராணுவ ஆயுதங்கள் அதிகரிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்படும் எனவும், அணு ஆயுதங்கள் மற்றும் உயிரி ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக யுக்ரேன் தன்னை பாதுகாத்துக்கொள்ள நேட்டோ உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும். யுக்ரேனிலிருந்து தங்கள் நாட்டு படையினரை திரும்பப்பெற வேண்டும்” என, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலியுறுத்தியுள்ளனர்.