வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா ( 49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் கேபிள் டிவி அப்பரேட்டர் துரைவர்மா (49). இவரது மகள் மோகன பிரீத்தி (13) போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார்.
கடந்த 25ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளே எலக்ட்ரிக் பைக்கை, சார்ஜ் போட்டுவிட்டு தனது படுக்கை அறைக்கு சென்று தந்தையும் மகளும் உறங்கச் சென்று இருக்கிறார்கள்.
மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் நேரத்தில் மின் இணைப்பில் இருந்த அந்த எலக்ட்ரிக் பைக் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததோடு கரும்புகை பரவிய நிலையில், எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டரும், அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீ பிடித்து எரிந்து வீடு முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.
இதனால் செய்வதறியாது பதற்றம் அடைந்த துரை வர்மா தனது மகள் மோகன பிரீத்தி உடன் வீட்டை விட்டு வெளியேற இயலாததால் கழிவறைக்குள் சென்று தஞ்சமடைந்தார்.
இருப்பினும், கரும்புகை நச்சுப் புகையாக மாறி தந்தையும் மகளும் மூச்சுவிட சிரமப்பட்டு கழிவறைக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
துரை வர்மா
வீட்டிலிருந்து கரும்புகை அதிகளவு வெளியேறிய காரணத்தினால் அக்கம்பக்கத்தினர் சம்பந்தப்பட்ட தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து தன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், கழிவறைக்குள் சடலமாய் சரிந்திருந்த தந்தை மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எலக்ட்ரிக் பைக் பேட்டரியை அதிக நேரம் சார்ஜ் செய்ததால் வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைந்து பைக் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா பிபிசி தமிழிடம் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நபர் வாங்கிய எலக்ட்ரிகல் பைக் முறையாக பதிவு பெற்று உரிய அங்கீகாரம் பெற்றது தானா என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம்.
இரவு நேரத்தில் வோல்டேஜ் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தகுந்தார்போல் மின்சாதனங்களை இவர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
எலக்ட்ரிகல் பைக் வெடித்து அதனால் ஏற்பட்ட தீ விபத்து அதன் காரணமாக ஏற்பட்ட கரும்பு கையினால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது முதல் கட்டமாக தெரிய வருகிறது,” என்று தெரிவித்தார்.