திருச்சி: 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..!
திருச்சி மாவட்டம் துறையூரில் கொட்டையூர் செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு 11-ம் வகுப்பு படித்து வருகிறார் அந்த மாணவர்..
கடந்த 5-ம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் விளையாட செல்வதாக சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
வழக்குப்பதிவு
அதற்கு பிறகு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை என்பதால், பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர்..
இறுதியில் துறையூர் போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்து பள்ளியில் தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்..
மாயம்
மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், மாணவன் படிக்கும் அதே பள்ளியில், டீச்சராக இருந்த ஷர்மிளா என்பவரும் அதே நாளில் மாயமாகி இருப்பது தெரியவந்தது..
அப்போதுதான், காணாமல் போன மாணவருடன், டீச்சர் ஷர்மிளாவும் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
ஷர்மிளாவின் செல்போன் நம்பரை போலீசார் டிரேஸ் செய்து கண்காணிக்க துவங்கினர்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரின் சிக்னல் காட்டிக் கொண்டே இருந்தது.
வேளாங்கண்ணி
முதலில் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என்று மாறிக் கொண்டே வரவும், டீச்சரை உடனடியாக பிடிப்பதில் சிக்கல் எழுந்தது..
இறுதியில், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சிக்னல் காட்டியிருக்கிறது.. எடமலைப்பட்டி புதூரில் உள்ள தோழியின் வீட்டில் ஷர்மிளாவும், மாயமான அந்த மாணவரும் தங்கியிருப்பதை கடைசியில் போலீசார் உறுதி செய்தனர்…
அதற்கு பிறகுதான், அந்த தோழியின் வீட்டுக்கு விரைந்த போலீசார், டீச்சரையும் மாணவரையும், துறையூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்..
ஒப்படைப்பு
அப்போதுதான் இவர்களுக்கு திருமணமான விஷயமே போலீசாருக்கு தெரிந்துள்ளது.. தஞ்சை பெரிய கோவிலில், 17 வயது மாணவனின் கையில் தாலி கொடுத்து கட்ட வைத்துள்ளார் ஷர்மிளா..
பள்ளியில் இருந்து மாணவனை இழுத்து சென்று, திருவாரூர் முழுவதும் சுற்றித்திரிந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் பெரிய கோயிலில் திருமணம் நடந்துள்ளது..
மாணவன் காணாமல் போய் 21 நாட்கள் கழித்து, அவனை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்..
இப்போது ஷர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, திருச்சி ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.
ஷர்மிளா
ஷர்மிளாவுக்கு 26 வயதாகிறது.. ஒரு ஆசிரியையாக இருந்தும், 17 வயது மாணவனை திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று தெரிந்தும் ஷர்மிளா இக்காரியத்தை துணிந்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இத்தனைக்கும் இவர் எம்ஏ, பிஎட், எம்ஃபில் படித்தவராம்.. இவர் டிகிரியை கேள்விப்பட்டு திருச்சியே உறைந்து போய்கிடக்கிறது.. அதைவிட கொடுமை, 6 ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் வேலை பார்த்து வருகிறாராம்..
பாலியல் தொல்லை
அதாவது மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு ஷர்மிளா பாடம் நடத்தியதாக தெரிகிறது…
அப்போதிருந்தே ஷர்மிளாவின் புத்தி தடுமாறி போயுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே வருகின்றன..
தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்.. அப்படி இருந்தும் பாலியல் வழக்குகள் பெருகி வருகின்றன..
தண்டனை
கடந்த சில மாதங்களாகவே ஆசிரியர்கள் கைதாகி வந்த நிலையில், ஆசிரியையும் போக்சோவில் கைதாகி உள்ளது வெட்கக்கேடானது..
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இப்படியானகுற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை..
அப்படியானால் போக்சோவைவிட தீவிரமான, கடுமையான சட்டங்களே அதிகம் தேவை என்பதையே அழுத்தமாக நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது…!