இருநாட்டு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
- யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை “முற்றிலும் குறைப்போம்” என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார்.
- அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நடுநிலையை ஏற்றுக்கொள்வதன் மூலம், நேட்டோ உள்ளிட்ட எந்தவொரு ராணுவ கூட்டணியிலும் யுக்ரேன் இணையாது என்பது இதன் அர்த்தமாகும்.
- யுக்ரேன் – ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான “மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என துருக்கி தெரிவித்துள்ளது.
களத்தில் என்ன நிகழ்ந்தது?
- யுக்ரேனின் தெற்கு நகரமான மிக்கோலைவில் அரசு கட்டடம் ஒன்றில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
- தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அந்நகர மேயர் விடாலி கிம், தாக்குதல் நடைபெற்றபோது தான் அக்கட்டடத்திற்குள் இல்லை எனவும், தான் அதிக நேரம் உறங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
- கீயவின் வடமேற்கில் பல்வேறு நிலைகளில் ரஷ்யப்படைகள், யுக்ரேனிய படைகளால் எதிர்ப்பை சந்தித்துவருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்:
- மார்ச் மாத தொடக்கத்தில் யுக்ரேன் – பெலாரூஸ் எல்லையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்ய பெரும்பணக்காரர் அப்ராமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவருடன் இரு யுக்ரேனிய பிரதிநிதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- இஸ்தான்புல்லில் யுக்ரேன் – ரஷ்யா இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஐரோப்பாவில் பங்குச்சந்தைகள் ஏற்றம்கண்டுள்ளன.
- யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மேரியோபோலில் நடப்பவை (ரஷ்யப்படைகளின் தாக்குதல்) “மனிதத்திற்கு எதிரான குற்றம்” என அவர் தெரிவித்துள்ளார்.
- யுக்ரேனில் உள்ள அணுமின் நிலையங்களை பாதுகாப்பு தொடர்பாக ஆராய, சர்வதேச அணு சக்தி முகமையின் இயக்குநர் யுக்ரேனுக்கு வருகைபுரிந்துள்ளார்.