மன்னாரில் கடந்த திங்கட்கிழமை (30) இரவு காரினுல் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களின் பிரேதப் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
இதன் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரியவந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஒரே நேரத்தில் இருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பேசாலையைச் சேர்ந்த 26 வயதான எம்.பிரதீப் மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த 35 வயதான எம்.மசூர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) பிரேதப் பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.