நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே கற்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை குறுகிய காலத்திற்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மாத்திரமே நடைமுறையிலிருக்கும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த நடைமுறையைப் பின்பற்றும் போது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற பேதமின்றி இந்த சுற்று நிரூபத்தை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏதேனுமொரு பாடசாலையில் மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுவார்களாயின் அவர்களை ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் அருகிலுள்ள பாடசாலைகளில் கடமைகளில் ஈடுபட அனுமதிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபம் மாகாண மற்றும் வலய கல்வி செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.