அதிகளவான ஹெக்டேர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்போது, “நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.
வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கி உள்ளோம். எனவே, தேவைக்கு ஏற்ப அரசியை சதோச, சுப்பர் மார்க்கெட்டுக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
அரிசி மாபியாவை இல்லாதொழிக்க நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ளும். தேவையைவிட பத்து மடங்காக அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் போது அரிசிக்கான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும்.
நான் அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு 2,48,000 ஹெக்டேர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 4,70,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே, மக்களுக்கு முன்பிருந்த அச்சம் இப்போது தேவையில்லை” என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.