எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு சில முக்கிய தீர்மானங்கள் இன்றை விசேட அமைச்சரவையின் போது முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை மாதம் 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும்.
இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சிபெட்கோ எரிபொருள் நிலையத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தோடு, நகர பாடசாலைகளுக்கு ஜூலை 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கும் கிராம பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளும் இடைநிறுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நாட்டுக்குள் எரிபொருட்கள் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில் அத்திகதி வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது கையிருப்பில் உள்ள அனைத்து வகையான எரிபொருட்களையும் அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதாரம், துறைமுகம், விமானசேவை, அத்தியாவசிய உணவு விநியோகம், பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் கையிருப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் தொகையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று இரவு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது எதிiர்பாராத விதமாக பாரிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது. எதிர்பார்த்தபடி எரிபொருள் கப்பல்களை உரிய நேரத்தில் கொண்டு வர முடியாமல் போயுள்ளதால் இந்நிலைமை தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் அமைச்சரவையில் மிக ஆழமாக ஆராயப்பட்டது.
அதன்படி எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பினை அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக விளக்கமளித்ததன் பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.அதன்படி இன்று நள்ளிரவு (இன்று நள்ளிரவு 27) முதல் உடன் அமுலாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க தீர்மானம் எட்டப்பட்டது.
அதற்கமைய சுகாதார சேவை,துறைமுகம்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள்,உணவு விநியோகம்,விவசாயம் ஆகிய அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும்,ஏனைய துறைகளை சார்ந்தோர் வீடுகளில் இருந்து சேவைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கல்வி அமைச்சர் பாடசாலைகளை நடாத்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள்,வலய கல்வி பணிப்பாளர்களிடம் கையளித்துள்ள நிலையில் நகர் புற பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
பொதுபோக்குவரத்து சேவையை பெரிதாக பயன்படுத்தாத பாடசாலைகள் தொடர்பில் அந்த பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானம் எடுக்கலாம்.அத்துடன் குறுந்தூர பொது போக்குவரத்து நடவடிக்கைகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை கொண்டு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ இந்த நிலைமை முடக்க நிலைமைஅல்ல எனவும் எனினும் மாகாணங்களுக்குள் பொது மக்களின் நடமாட்டங்களை இயன்றளவு கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்ட நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைய நெருக்கடியான நிலைமையை எதிர்வரும் மாதம் 10ஆம் திகதிக்குள் கட்டம் கட்டமாக சீரான நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் அதற்காக தற்போது நிதி நெருக்கடியை தீர்க்க மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் ஊடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதித்தொகையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
(எம்.எப்.எம். பஸீர்,இராஜதுரை ஹஷான்)