தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாவிக்குள் குதித்ததில், அத்தாயும் அவரது 5 வயது பிள்ளையும் உயிரிழந்துள்ள நிலையில், அவரது 11 வயதான மகன் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த சுரங்கிகா மதுமாலி எனும் 32 வயதான தாயொருவரே இவ்வாறு தனது இரு பிள்ளைகளுடன் சந்திரிக்கா வாவியின் மதகுப் பகுதியிலிருந்து வாவிக்குள் குறித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த தாய் இரு பிள்ளைகளுடன் வாவிக்குள் குதித்த பின்னர், 11 வயதான சாம் துஷ்மந்த எனும் மகன் ஒருவாறு நீந்தி கரைப் பகுதிக்கு வந்து, கூக்குரல் எழுப்பி உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகளும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரும் உடனடியாக சந்திரிக்கா வாவியில் குதித்து, தாயையும் 5 வயது மகனையும் மீட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் இருவரின் நிலைமையும் அப்போதும் கவலைக் கிடமாக இருக்கவே உடனடியாக அவர்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு வைத்து சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1.45 மணியளவில் 5 வயதான பிள்ளை உயிரிழந்த நிலையில். தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற்று வந்த நிலையில், மாலை வேளையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் தாயிடமிருந்து 2 ஆயிரம் ரூபா பணமும் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.