ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV – uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர்.
ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
வெடிமருந்து நிரப்பப்பட்ட அந்தப் படகை, ரஷ்ய கடற்படையினர் பின்னர் நடுக்கடலில் வெடிக்க வைத்து அழித்தனர்.
இந்தப் படகின் வடிவமைப்பும், பயன்பாட்டு நோக்கமும், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகளை முன்மாதிரியாவை கொண்டிருந்தது.
உக்ரேனின் இந்தப் புதிய ஆயுதம், ரஷ்ய கடற்படையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகள் கையாண்ட போர் உத்திகளை, உக்ரேன் தனக்குரிய பாணியில்- தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையாளத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம்.
இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள், பயன்படுத்திய கரும்புலிப் படகுகள் ஆட்களால் இயக்கப்படுவது. பெரும்பாலும் அவை வெளியிணைப்பு இயந்திரங்களைக் கொண்டது.
ஆனால் செவஸ்டபோல் துறைமுகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உக்ரைன் படகு, ஆட்களின்றி பயணம் செய்யக் கூடியது.
‘வோட்டர் ஜெட்’ எனப்படும் ஒற்றை நீருந்து விசை இயந்திரத்தினால் செயற்படக் கூடியது.
ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்புலிகளின் படகு கட்டுமான மையத்தில் இதே வடிவத்தை கொண்ட மற்றும் நீருந்து விசையில் இயங்கும் ஒற்றை இயந்திர படகுகள் வடிவமைப்பு நிலையில் மீட்கப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட பெரும்பகுதி மூழ்கிய நிலையில், பயணம் செய்யக் கூடியதாக இந்தப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் முனையில், குண்டுத் தலையாக (war head) ஆட்டிலறி குண்டு அல்லது மோட்டார் குண்டு, பொருத்தப்பட்டது.
படகில் நிரப்பப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்வதற்கு அதுவே வெடிப்பு ஊக்கியாக இருந்தது.
ஆனால், காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது மோதிய கரும்புலிப்படகு வெடிக்கவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு அல்லது குண்டுத் தலை செயலிழந்தால், அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.
இதன் பின்னர் கடற்புலிகள் தங்களின் கரும்புலிப் படகுகளில் இரண்டு குண்டுத் தலைகளைப் பொருத்தினர்.
செவஸ்டபோல் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உக்ரேனின் ஆளில்லா குண்டுப் படகிலும், அதேபோன்று இரண்டு குண்டுத் தலைகளே பொருத்தப்பட்டிருந்தன.
கடற் கரும்புலிகளின் படகுகளில் இல்லாத நவீன சோனார் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன.
உக்ரேன் இந்த படகுகளை எப்போது வடிவமைத்தது என்று தெரியவில்லை. ஆனால், இதனை உக்ரேனின் புதிய ஆயுதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் இந்த வகை குண்டுப் படகுகளை கடற்படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகள் இந்தப் படகுகளை கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தது இத்தாலி தான்.
இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு, வெடிமருந்து நிரப்பிய படகுகளை இத்தாலி பயன்படுத்தியது.
ஆனால் ஜப்பானிய விமானப்படையின் ‘கமிகாசி’ எனப்படும் தற்கொலைப்படை விமானிகளைப் போல, இத்தாலிய கடற்படையினர், செயற்படவில்லை.
அவர்கள் ஆறு சிறிய படகுகளில் 330 கிலோ வெடிபொருட்களை நிரப்பி, சுடா குடாவில் (Suda Bay) பிரித்தானிய கடற்படையின் 3 கப்பல்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
‘யோர்க்’ என்ற பிரித்தானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பலின் மீது இரண்டு படகுகள் மோதி வெடித்தன. மூன்றாவது படகு எண்ணெய் தாங்கி கப்பல் மீது மோதி வெடித்தது.
ஏனைய மூன்று படகுகளும், தொழில்நுட்ப காரணங்களாரோ மனித காரணங்களாலோ வெடிக்கவில்லை.
இந்த தாக்குதலை நடத்திய இத்தாலிய கடற்படையினர், பிரித்தானிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், போரில் எதிரியிடம் சிக்கும் மரபைக் கொண்டிராதவர்கள்.
அவர்கள், கடற்படைக் கப்பலின் மீது மோதி வெடித்து, சாகும் வகையில்- தங்களின் உத்தியை வடிவமைத்தனர்.
இத்தாலிக்குப் பின்னர் 1948இல், எகிப்தின் அமீர் பாரூக் என்ற போர்க்கப்பலை இஸ்ரேலியப் படையினர் சிறிய வெடிபொருள் படகு ஒன்றை வெடிக்க வைத்து மூழ்கடித்திருந்தனர்.
அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளே இந்த போர் உத்தியைக் கையாண்டிருந்தனர்.
பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், குறைந்தளவு வசதிகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு தான், விடுதலைப் புலிகள் கரும்புலிப் படகுகளை வடிவமைத்தனர்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் போர் உத்திகளை, பல நாடுகளின் கடற்படையினர் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதற்கு முயன்றனர்.
பல நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் இதுபற்றி கேட்டறிந்துள்ளனர். கடற்புலிகளின் படகுகளின் திறன் மற்றும் வடிவமைப்பு குறித்து, அவர்கள் நேரிலும் ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர்.
உக்ரைனிய கடற்படை அதிகாரிகள் அல்லது நிபுணர்களும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்டனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனாலும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் வடிவமைப்பு மற்றும் உத்திகளைப் பிரதி செய்திருக்கின்றனர் அல்லது அதனை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்கள், தங்களின் படகில், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கு இரண்டு குண்டுத் தலைகளை, படகுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆனாலும், அந்தப் படகு இலக்குத் தவறி ரஷ்யப் படைகளிடம் சிக்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், வெடிபொருள் நிரப்பிய படகுகளைப் பயன்படுத்தியவர்கள், யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான்.
சவூதி அரேபிய கடற்படைக்கு எதிராக அவர்கள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அவர்களின் ஆயுத அணிவகுப்பு ஒன்றில் ஆளில்லா வெடிமருந்துப் படகுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தப் படகுகளிலும் நவீன தொழில்நுட்பம் காணப்படுகிறது.
இதனை, வடிவமைத்துக் கொடுத்திருப்பது ஈரான் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ஈரான், ஆளில்லா விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அவற்றை தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்புகளில் திருத்தங்களைச் செய்திருக்கிறது.
அதுபோவே ஆளில்லா தாக்குதல் படகுகளையும் ஈரான் வடிவமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறான வெடிபொருள் நிரப்பிய படகுகளை கொண்டு தாக்கும் உத்திகளை கையாண்ட, அதில் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றவையெல்லாம் நாடுகளாகவே இருந்து வருகின்றன. விடுதலைப் புலிகள் மட்டுமே, அதிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றனர்.
-சுபத்ரா–