போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் சேகரிப்பதற்காக பௌத்த துறவிகள் வேடத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் 5 பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஐவரும் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ன.
தாய்லாந்தின் காவோ போ தோங் மாவட்டத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் நடவடிக்கைகள், பௌத்த துறவிகளின் நடவடிக்கைகளைப் போன்று இல்லாதிருப்பதை அவதானித்த உள்ளூர் மக்கள் இவர்கள் குறித்து சந்தேகமடைந்தனர்.
துறவிகள் வேடத்திலிருந்த இவர்களுக்கு, உணவு, நீர் போன்றவற்றை மக்கள் வழங்கும்போது அவற்றை இந்நபர்கள் ஏற்க மறுத்தனர்.
மக்களிடமிருந்து எப்போதும் பணத்தை மாத்திரமே பெறுவதற்கு இவர்கள் ஆர்வம் காட்டினர் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், மலைப்பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பொலிஸார் தேடுதல் நடத்தினர். இதன்போது 5 சந்தேக நபர்களும் சிக்கினர்.
சுமார் 10 பேர் இம்மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாரின் முற்றுகையின்போது ஏனைய சந்தேக நபர்கள் தப்பியோடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் எஞ்சியிருந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் ஆவணங்களை கேட்டபோது, ஆவணங்களை சமர்பிக்க அவர்களால் முடியவில்லை.
அதையடுத்து மேலதிக விசாரணைக்காக அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் கம்போடியாவிலிருந்து எல்லையைக் கடந்து தாய்லாந்துக்கு வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களில் இருவர் போதை யில் காணப்பட்டனர். தாம் போதைப் பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் இருவரும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.