ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 138 ரன் இலக்கு நிர்ணயித்தது.
இரண்டாவதாக பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தாலும், சமாளித்து விளையாடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி உலகக் கோப்பையை வென்றது.
இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார்.
19வது ஓவரின் 5வது பந்தில் 4 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்த ஸ்டோக்ஸ், அடுத்த பந்தில் வெற்றிக்குத் தேவைப்பட்ட ஒரு ரன்னை எடுத்தார்.
போட்டியில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பாபர் ஆஸமும் முகமது ரிஸ்வானும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
ஆனால் நியூஸிலாந்துடனான போட்டியைப் போல இந்தப் போட்டியில் அந்த இணை நீடித்து நிற்கவில்லை.
முதல் ஓவரிலேயே முகமது ரிஸ்வான் ஒரு ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பினார். ஸ்டோக்ஸ் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த ரிஸ்வான் வேகமாக ரன் எடுக்க ஓடியபோது கிறிஸ் ஜோர்டான் எறிந்த பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகிச் சென்றதால் ரிஸ்வான் தப்பினார். பவர் பிளே ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைவாகவே இருந்தது.
5 ஆவது ஓவரில் சாம் கரன் பந்துவீச்சில் ரிஸ்வான் போல்டாகி ஆட்டமிழந்தார். மிகவும் நம்பிக்கையாக கருதப்பட்ட ரிஸ்வான் 15 ரன்களை மட்டுமே எடுத்தார்.
அதன் பிறகு அதிரடியாக ஆடும் முகமது ஹாரிஸ் களமிறங்கினார். அணியின் ரன் எடுக்கும் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
எனினும் 6 ஓவர் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
8-ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் வந்தார். அவரது முதல் பந்திலேயே முகமது ஹாரிஸ் முன்னே இறங்கி லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை ஸ்டோக்ஸ் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பிடித்தார். ஹாரிஸ் 12 பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெளியேறினார்.
முதல் பத்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி குறைந்த வேகத்திலேயே ரன்களை எடுத்தது. தொடர்ச்சியான பவுண்டரிகளை அந்த அணியால் அடிக்க முடியவில்லை.
10 ஓவர் முடிந்த போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது.
பாபர் ஆஸம் அவுட் – தடுமாறிய பாகிஸ்தான்
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
12 ஆவது ஓவரின் முதல் பந்தில் பாபர் ஆஸம் அவுட் ஆனார். ரஷீத் வீசிய கூக்ளியை அடிக்க முயன்றபோது மட்டையின் வெளிப்புறம் பட்ட பந்து ரஷீத்தை நோக்கிச் சென்றது.
அதை பாய்ந்து பிடித்து பாபரை வெளியேற்றினார் ரஷீத். இந்தக் கட்டம் போட்டியின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அப்போது பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளிலும் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
அடுத்த ஓவரிலேயே ஸ்டோக்ஸ் பந்தில் கீப்பரிடம் பிடிகொடுத்து இஃப்திகார் அகமது அவுட் ஆனார்.
அதன் பிறகு பாகிஸ்தான் அணியால் ரன் குவிப்பை வேகப்படுத்த முடியவில்லை. ஒன்றும் இரண்டுமாகவே ரன்கள் வந்தன. பவுண்டரிக்கு பந்து செல்வது அபூர்வமானது.
எனினும் ஒரு முனையில் இருந்த ஷான் மசூதும், மற்றொரு முனையில் ஷதாப் கானும் ஓரளவு கணிசமான ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
டெத் ஓவர்கள் தொடங்கியதும் தொடங்கியதும் களத்தில் இருந்த ஷான் மசூத் அதிரடியாக ஆட முற்பட்டு சாம் கரன் பந்தில் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு பெரிதும் உதவினார்.
அடுத்த ஓவரிலேயே ஷதாப் கானும் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி 123 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி இரண்டு ஓவர்களிலும் பாகிஸ்தான் அணியால் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டுமே பாகிஸ்தானே திணறடித்தன. 4 ஓவர்களை வீசிய சாம் கரன், வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆதில் ரஷீத் வீசிய ஒரு ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து பேட்டிங்
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டகாரர் ஹேல்ஸ் சாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் நசீம் ஷாவின் இரண்டாவது ஓவரில் 14 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.
4-ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது.
அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவதி ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.
10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.
தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள்.
11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
ஆனால் 13-ஆவது ஓவரில் ஷதாப் வீசிய பந்தில் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் பிடிகொடுத்து ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்கத் தடுமாறினார்கள். 14-ஆவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர்.
16-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-ஆவது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.
19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.