விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி, அதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது என இலங்கை அரசாங்கம், இராணுவம், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் தகவல்களை வெளியிடுவது தான் வழக்கம்.
இப்போது அவ்வாறானதொரு செய்தி இந்திய ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. அந்தச் செய்தியைக் கொடுத்திருப்பது இந்தியப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள்.
புலம்பெயர் தமிழர்கள் தான், இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர் என கடந்த 14 ஆண்டுகளில் பலமுறை செய்திகள் வெளிவந்து விட்டன.
ஆனால், இப்போது இந்திய புலனாய்வு வட்டாரங்கள் கசிய விட்டுள்ள தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீளுயிர் கொடுக்க முனைவது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளை இந்தியாவிலும் இலங்கையிலும் மீள உயிர்ப்பிப்பதால், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு என்ன இலாபம்? என்ற கேள்வியும் குழப்பமும் பலருக்கு இருக்கிறது.
ஏனென்றால், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு, தொடக்கம் முதல் இறுதி வரை உதவி வந்த நாடு பாகிஸ்தான்.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா உதவியிருந்தாலும், விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சிகள், ஆயுதங்களைக் கொடுத்து, ஆரம்பத்தில் வளர்த்து விட்டது இந்தியா தான்.
பாகிஸ்தான் அவ்வாறில்லை. 1986இல் ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் ஷியா உல் ஹக், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க சிறப்புப் படையினருக்கான பயிற்சிகள், ஆயுதங்களை வழங்கத் தொடங்கியது பாகிஸ்தான்.
இலங்கைப் படையினர் நெருக்கடியில் சிக்கியிருந்த ஒவ்வொரு தருணத்திலும் பாகிஸ்தானே கைகொடுத்தது.
ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பின்னர், 2000ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அரியாலை, தனங்கிளப்பில் தரையிறங்கி, தென்மராட்சி நோக்கியும், யாழ். நகரை நோக்கியும் முன்னேறிக் கொண்டிருந்த கட்டத்தில்- யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் படையினர் சிக்கிக் கொள்ளும் நிலை உருவானது.
உளவியல் ரீதியாகப் படையினர் சோர்ந்திருந்த போது, பாரிய சரணடைவு ஒன்றும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த தருணத்தில் பாகிஸ்தானிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் அவசரமாக யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
அவற்றைக் கொண்டு நடத்திய தாக்குதல்களினால் தான் அப்போது யாழ்ப்பாணத்தை அரச படைகளால் தக்க வைக்க முடிந்தது.
2008ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போர் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, படையினர் மாங்குளத்தை அண்டிய பகுதிகள் வரை முன்னேறியிருந்தனர்.
அப்போது இராணுவத்தினரிடம் ஆட்டிலறி மற்றும் மோட்டார் குண்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அவற்றைத் தருவிக்கும் வரையில் போரைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அத்தருணத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனிப்பட்ட முறையில், விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவசரமாக பாகிஸ்தானில் இருந்து ஆட்டிலறி மோட்டார் குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த ஆட்டிலறி, மோட்டார் குண்டுகள் பாகிஸ்தானின் இராணுவக் களஞ்சியங்களில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருந்தவை அவை.
எந்த நாடும் தங்களின் பாதுகாப்புத் தளபாடங்களை விற்பனைக்காக வைத்திருந்தால் அல்லது மேலதிகமாக வைத்திருந்தால் அவற்றை வேறு நாடுகளுக்கு வழங்கும். தனது இராணுவத்தின் தேவைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதை கொடுக்காது.
இந்திய எல்லை எப்போதும் பதற்றமாகவே இருந்து வந்தாலும் பாகிஸ்தான் இராணுவம் தனது கையிருப்பில் இருந்த குண்டுகளை வழங்கியது.
அப்போது, படை நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தால், புலிகள் தங்களை மீளமைத்துக் கொண்டு தாக்கியிருப்பார்கள் என பின்னர் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
அண்மையில் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழு, பாகிஸ்தான் சென்றிருந்த போது, தாங்கள் வழங்கிய ஆயுதம் தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவியது என்று பாகிஸ்தான் ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்றின் முகவர் கூறியிருந்தார்.
அவர் குறிப்பிட்ட அந்த ஆயுதம், 40 மில்லி மீற்றர் தன்னியக்க பிகே கிரனேட் லோஞ்சர். இதுபோன்ற நவீன ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு நெருக்கடியான தருணங்களில் கொடுத்து உதவியது பாகிஸ்தான்.
அப்படிப்பட்ட பாகிஸ்தான், விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க முனைகிறது என்ற செய்தி நம்ப முடியாதது.
விடுதலைப் புலிகளுக்கு மீளுயிர் கொடுப்பதன் மூலம், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க, பிராந்தியத்தில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் திட்டமிடுகிறது என்பது இந்திய ஊடகங்களின் அல்லது புலனாய்வுப் பிரிவின் கண்டுபிடிப்பு.
விடுதலைப் புலிகளால் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளக் கூடியது இந்தியா அல்ல இலங்கை தான்.
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீளுயிர் கொடுக்கப் பலர் முயன்றது உண்மை.
ஆனால் அவையெல்லாம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. இலங்கைப் புலனாய்வு அமைப்புகள் மாத்திரமன்றி, இந்தியா மற்றும் பிற நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்திருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவச் செயற்பாடுகள் முடங்கி 14 ஆண்டுகளாகி விட்டன. பிரபாகரனைப் போன்ற ஆளுமையானதொரு தலைமைத்துவம் கிடைக்காத வரை- விடுதலைப் புலிகளுக்கு மீளுயிர் கொடுக்க முடியாது.
2009இற்குப் பின்னர் நிலைமைகள் எவ்வளவோ மாறி விட்டது. போர் ஒன்றின் மூலம் தீர்வை அடைய முடியும் என்ற நம்பிக்கை இப்போது தமிழர்களிடம் இல்லை.
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்போ, இந்திய புலனாய்வு அமைப்போ மட்டும் நினைத்து விட்டால், புலிகளுக்கு மீளுயிர் கொடுக்க முடியாது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை தனது தேவைகளுக்கு பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களைத் தான் இந்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. கைது செய்திருக்கிறது.
அந்த 9 பேரில் ஒருவர் இந்தியர். ஏனையவர்களில் சிங்களவர், முஸ்லிம், தமிழர் என பலரும் உள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க சிங்களவரின் உதவியை எவரேனும் நாடுவார்களா? என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல் இவ்வாறான கதைகள் கட்டப்படுகின்றன.
போதைப்பொருளுடன், துப்பாக்கிகளையும் ஏற்றிய படகு ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தது உண்மை. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு புலிகளுக்கு உதவ விரும்பியிருந்தால், அல்லது புலிகளை உயிர்ப்பிக்க நினைத்திருந்தால், நேரடியாக ஆயுதங்களையும், நிதியையும் வழங்கியிருக்கும்.
போதைப் பொருட்களை கொடுத்திருக்காது. அதனை விற்று, நிதியைத் திரட்டுவது கடினம். அதற்குள் ஏற்படக் கூடிய ஆபத்துகளால் தங்களின் முயற்சிகள் கெட்டு விடும் என்றே எந்தவொரு புலனாய்வு அமைப்பும் சிந்திக்கும்.
ஆனால் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு போதைப் பொருட்களை கொடுத்து அனுப்பியிருக்கிறது.
இது, நிதியை திரட்டுவதற்கான உத்தியாக மட்டுமல்ல, போதைப்பொருள் அடிமைகளை உருவாக்கும் திட்டமும் கூட.
கடத்தல் குழுவினரிடம் இருந்த துப்பாக்கிகள், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவையாக இருக்கலாம்.
விடுதலைப் புலிகள் மீது பாகிஸ்தானுக்கு அனுதாபமும் இல்லை. அவர்களை உயிர்ப்பிப்பதால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
விடுதலைப் புலிகள் தொடர்பாக இந்தியா கவலைப்பட்ட காலம், பிரபாகரனுடன் முடிந்து விட்டது, அதேவேளை விடுதலைப் புலிகளை உயிர்ப்பிப்பதென்பது இலங்கையின் பாதுகாப்புடன் தான் நேரடியாக தொடர்புபடும். அது இலங்கைக்கே அச்சுறுத்தலாகும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது இந்தியாவுக்கே சாதகமாக அமையும். குறிப்பாக, ஐ.எஸ்.ஐ. அமைப்பு இதனுடன் தொடர்புபட்டிருக்கிறது என்பது வெளியே தெரியவந்தால், இலங்கையுடனான பாகிஸ்தானின் உறவுகள் பாதிக்கப்படும்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கும்பலுக்கும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கும் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதுபற்றி இந்திய புலனாய்வு துறை விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம்.
ஆனால், இதற்குள் விடுதலைப் புலிகளைக் கொண்டு வந்திருப்பது, வெறும் பிரசார நோக்கிலான செயற்பாடு தான்.
கவனத்தை திசை திருப்ப புலனாய்வு அமைப்புகள் இவ்வாறு செய்வதுண்டு. அதனைத் தான் இந்திய புலனாய்வு அமைப்பும், இந்திய ஊடகங்களும் செய்ய முயற்சிக்கின்றனவா?