திருவள்ளூர் அருகே திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற மணப்பெண்ணை, கணவர் கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த நீதிவாசன். இவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணான சந்தியாவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இவர்களது முதலிரவு அன்று அதிகாலை 3 மணி அளவில் வேட்டி மட்டும் அணிந்திருந்த நீதிவாசன் உரக்க கத்தியவாறே முதலிரவு அறையில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.
இதனால் பதறியடித்து எழுந்த உறவினர்கள், முதலிரவு அறைக்குள் சென்று பார்த்த போது மணமகள் சந்தியா ஆடைகள் கலைந்த நிலையில் கடப்பாரையால் அடித்தும் , குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுஇரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் சந்தியாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் காலை 7 மணியளவில் அருகிலுள்ள வயல்வெளியில் கழுத்தில் வேட்டி சுற்றப்பட்ட நிலையில் நீதிவாசனின் சடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”கடந்த சில ஆண்டுகளாக நீதிவாசன் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார் என்பதும் கடந்த 3 மாதங்களாக அதற்கான மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என உறவினர்கள் கூறியதைக் கேட்டு உறவுக்கார பெண்ணான சந்தியாவை நீதிவாசனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.