108 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். இதன்படி, அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் காலனித்துவ நிர்வாகத்தால் அரசாங்கத்திற்கு எதிரான கலவரம் செய்தமை மற்றும் தேசத்துரோகத்திற்காக இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
ஜூலை 7, 1915 இல், (அவரது 27 வது வயதில்) எந்த மேல்முறையீட்டையும் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஹென்றி பெட்ரிஸின் உடல், இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளியை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
அப்போது நாட்டைக் கட்டுப்படுத்திய மூத்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினாலேயே அவர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இதன்படி, கொலைச் சம்பவம் தொடர்பான உண்மைத் தகவல்களைக் கண்டறியும் வகையில், அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.