ஆஸ்திரியாவில் ஒரு ஜோடி, கடந்த 43 ஆண்டுகளில், 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அத்தம்பதி உதவித்தொகை வாங்கி பயனடைந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்…
ஆஸ்திரிய பெண் ஒருவர் 1981ல் தனது முதல் கணவர் இறந்ததற்கு பிறகு, ஆஸ்திரிய அரசாங்க சட்டத்தின்படி கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார்.
அதன் பிறகு 1982ல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.
ஆனால் இந்த மறுமணம் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் ஓய்வூதியத்தை நிறுத்தியது.
இதனால் கைம்பெண்ணாக இருந்தால்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நினைத்த அப்பெண், தனது இரண்டாம் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அந்த நபரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
மீண்டும், அரசாங்கத்திற்கு இவர்களின் திருமணம் தெரியவரவே… அப்பெண்ணுக்கு கொடுத்து வந்த கைம்பெண் பணத்தை நிறுத்தியது.
மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்க நினைத்த அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அரசாங்கத்திடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, பிரிந்த கணவரை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
இதே போன்று அரசு எப்போதெல்லாம் கைம்பெண் பணத்தை நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு கைம்பெண் பணத்தை பெற்றுக்கொண்ட கையோடு மீண்டும் கணவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இப்படி கைம்பெண் ஓய்வூதியத்தைப்பெற கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து வாங்கிக்கொள்வது – மீண்டும் திருமணம் செய்துக்கொள்வது என 43 ஆண்டுகளாக, 12 முறை அவர் இந்த நாடகத்தை அறங்கேற்றியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இவரின் நாடகம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு தெரியவர, அப்பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட ஓய்வூதியத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியது.
ஆனால், அப்பெண்ணோ விக்கிரமாதித்தன் வேதாளம் கதையைப்போன்று, 13வது முறையாக தனது கணவரை விவாகரத்து செய்து மீண்டும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார்.
இம்முறை சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை விசாரிக்கையில், இருவரும் வெளி உலகிற்கு பிரிந்ததைப்போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, ஒரேவீட்டில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணிற்கான ஓய்வூதியத்தை அரசாங்கத்தை முற்றிலும் நிறுத்தியது.
இதனை எதிர்த்து அப்பெண் 2022ல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். இவர்களின் வழக்கை விசாரித்த ஆஸ்திரியா உச்சநீதிமன்றம் மார்ச் 2023 இல், இவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து, “மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொள்வதும் இப்படி விவாகரத்து செய்து கொள்வதும் தவறானது. ஏனெனில் உங்களின் விவாகரத்துகளும் திருமணமும் கைம்பெண் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே நிகழ்ந்துள்ளன” என்று தீர்ப்பளித்தது.
இப்படி இவர் தனது 73ம் வயதுவரை மொத்தமாக அரசிடமிருந்து பெற்ற ஓய்வூதியமானது 3,42,000 டொலர் என்பது தெரியவந்துளது