மட்டக்களப்பு- திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வான் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் -காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை வீதியில் கொழும்பை நோக்கி சம்பவ தினமான நேற்று அதிகாலை 6.30 மணிக்கு பிரயாணித்த வான் தனியார் வங்கியான ஷற்றன் நஷனல் வங்கிகக்கு முன்னால் வீதியை கடக்க முற்பட்ட குறித்த நபருடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்குபஸ் வண்டியில் வந்து இறங்கிய நிலையிலே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து வான் சாரதியை கைது செய்ததுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.