ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம்.
காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனுப்பிய லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் சுற்றுலா மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கொடுத்துள்ள பதிலடி யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானூடாக பாயும் சிந்து நதியை இந்தியா தடுக்காதிருப்பதற்கான ஒப்பந்தம் 1960களில் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் கையெழுத்தானது.
சிந்து நதிநீர் பாகிஸ்தானை பொறுத்தவரை பெருமளவு மக்களுக்கான குடிநீராகவும் விவசாயத்திற்கான முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றது.
இந்நிலையில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு பதிலடியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
மேலும் 26 நாடுகளின் இராஜதந்திரிகளை அழைத்து தமது இந்த முடிவுக்கு பாகிஸ்தானே முழுப்பொறுப்பும் என்ற விளக்கத்தை வெளியுறவுத்துறை விளக்கப்படுத்தியுள்ளது. முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளை வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வறிவிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாக சரிந்து வருகிறது. சிந்துநதி நீர்த் தடை என்பது பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 30 வீதம் வரையில் வீழ்ச்சி காணும் என பாகிஸ்தானிய பொருளியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியளவிலான தண்ணீர்ப் பஞ்சம் உட்பட சங்கிலித் தொடராக பாரிய பொருளாதாரத் தாக்கத்தை பாகிஸ்தான் சந்திக்க இருப்பதாக சர்வதேச பொருளியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கையைப் போன்றே கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி பாரிய தாக்கத்தை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற வகையில் பெருமளவு இந்திய ராஜதந்திரிகளை பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
இதை இந்தியாவும் இரத்தத்திற்கு இரத்தம் என்ற வகையில் கையாளும் என எதிர்பார்க்கலாம். முற்றிவரும் இந்த முறுகல் நிலை சர்வதேச அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மேல் செல்லாமல் அதிகபட்ச பொறுமையை இரு தரப்பும் கடைப்பிடிக்குமாறு ஐ.நா.சபை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிந்துநதி நீர் விடயம் தமக்கு அறிவிக்கப்படவில்லையெ உலக வங்கி கூறியுள்ளது. இரண்டு நாடுகளும் அணுவாயுதத்தை தம்வசம் கொண்ட நாடுகள் என்ற வகையில் இம்மோதல் வெடித்தால் இப்பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய அபாயங்களையும் அலட்சியம் செய்துவிட முடியாது.
மொத்தத்தில் இந்தியாவின் நகர்வுகள் பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்துள்ளமையும் பாகிஸ்தான் அதனை கையாள வல்லமையுள்ளதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் கையெழுத்திடப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறித் தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருப்பதானது தன்னைச் சூழவுள்ள நாடுகள் தனது நலன்களை மதிக்காமல் செயற்பட்டால் என்னாகும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாகவும் நோக்க முடியும்.
பங்களாதேஷில் ஷேக் கஷினாவை வெளியேற்றிய சக்திகளும் இந்திய எதிர்நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் ஒன்றில் சீன சார்பாகவோ அல்லது அமெரிக்க சார்பாகவோ தான் உண்மையாக செயற்பட்டார்களே ஒழிய இந்தியாவின் நண்பர்களாக செயற்படவில்லை. வேறுவழியின்றி இந்தியாவிடம் அடங்கிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்தனர்.
இன்று தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) என்ற பெயரில் ஆட்சி நடத்தும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இந்திய எதிர்ப்பு வாதத்தை தமது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொன்றது.
இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதே அதன் சாராம்சமாகும். இந்திப் பிராந்தியத்தில் (தெற்காசியா) இந்தியா நிலப்பரப்பிலும் சரி மக்கள் தொகையிலும் சரி பொருளாதார வளத்திலும் சரி தொழில்நுட்பத்திலும் சரி பிராந்திய நாடுகளின் ஒட்டுமொத்தப் பலத்திற்கும் மேலானது.
அதேவேளை இப்பிராந்திய நாடுகள் அனைத்தும் மொழியாலோ மதத்தாலோ ஏனைய கலாசாரப் பின்னணிகளாலோ இந்தியாவுடன் பின்னிப்பிணைந்தவை எனவே இவற்றைப் பயன்படுத்தி இந்தியா படிப்படியாக இலங்கை உட்பட இப்பிராந்திய நாடுகளை ஆக்கிரமிக்கும்.
எனவே இந்தியா இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை முகவர்கள். எனவே தமிழர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள்.
இது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கை. இதனால்தான் ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு ஓலங்களை ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்தது. அதேவேளை ஜே.வி.பி. ஓர் வலுவான சீன சார்ப்பு கட்சி என்பதும் இன்று அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு பின்பலமாக சீனாவே செயற்பட்டது என்பதும் அறிந்ததே.
அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தானது. மோடிக்கு அதியுயர் தேச மித்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலங்கை மண்ணை இந்திய நலனுக்கெதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார பேசியிருந்தார்.
ஆட்சியில் இருப்பதனால் இந்தியாவை மகிழ்விப்பதற்கும் தமது ஆட்சிக்கு பங்கம் வந்துவிடாமல் பார்க்கவும் விருதுகள் அறிக்கைகள் பயன்படலாம்.
ஆனால் இந்தியாவின் தேவை அதன் பல்வேறு திட்ட முன்மொழிவுகளை செயல்வடிவம் பெற வைப்பதே. இலங்கை முன்னைய ஆட்சியாளர்களும் சரி தற்போதை ஆட்சியாளர்களும் சரி இந்திய திட்ட முன்மொழிவுகளை இழுத்தடிப்பது தொடர்கிறது.
அதேவேளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வருகிறது. இது 13வது திருத்தத்திற்கு மேலாக வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பையும் உள்ளடக்கிய கோரிக்கையாகும்.
இந்த விடயத்திலும் முன்னைய ஆட்சியாளர் காலம் கடத்தினர். தற்போதைய ஆட்சியாளர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் வன்முறைப் போராட்டம் நடத்தி 60 ஆயிரம் பேர் கொல்லப்பட காரணமானவர்கள்.
13வது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த விருப்பமற்றவர்கள் இணைந்திருந்த வடக்கு – கிழக்கை பிரித்தவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்றோ அரசியல் யாப்பில் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதன் மூலம் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்குங்கள் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஜே.வி.பி. ஆட்சியாளருக்கு வெறுப்பேற்றும் விடயமாகும்.
எனவே இந்திய நலன்களுக்கு இலங்கை இடையூறும் நிலை ஏதேனும் வகையில் ஏற்பட்டால் மட்டுமல்ல இந்தியாவின் திட்ட முன்மொழிவுகளை இலங்கை பின்னடிக்கும் அல்லது நிராகரிக்கும் பட்சத்தில் இந்தியா இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு காட்டிய சமிக்ஞைகள் போலவோ சற்று மேலாகவோ காட்டக்கூடும்.
உதாரணமாக கச்சதீவு விடயம் இருதரப்பு ஒப்பந்தமே. இந்தியா கச்சதீவில் தனது கடற்படையை நிலைகொள்ள வைப்பது கடினமானதல்ல.
அதன்மூலம் அது இலங்கையை கையாளவும் முடியும். உள்நாட்டு அரசியலில் பலம்பெறவும் முடியும். எனவே சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தி வைப்பானது கச்சதீவு ஒப்பந்தத்திற்கும் ஏற்படலாம். அதுமாத்திரமன்றி இனமோதல் தீர்வின் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பிராந்திய சர்வதேச அரசியல் காலநிலைகள் எப்போது எவ்வாறு மாறும் என்று கூறமுடியாது. ஆனால் அது எப்போது எவ்வாறு மாறினாலும் இனமோதல் தீர்விற்கு சார்பாக அம்மாற்றங்களை கையாள தமிழ்த் தலைமைகள் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இத்தகைய உருப்படியான அரசியல் தூரப்பார்வையுடனான வெளிப்பாடான கலந்துரையாடல்களோ கொள்கைத் திட்டங்களோ அன்றி துரோகிகள் தியாகிகள் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களாகவும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் குறுகிய கூட்டத்திலான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையுமே சில கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
யுத்த காலங்களில் எமது விடுதலை அல்லது அதிகாரப்பகிர்வு நோக்கிய பல சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படவில்லை.
இனிமேலும் அவ்வாறு இருப்பது எம்மினத்தின் ஒட்டுமொத்த அழி;விற்கே இட்டுச்செல்லும். ஒருவர் மீது ஒருவர் பழிசொல்லவும் இழிவான பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் எவருக்கும் அருகதையில்லை.
கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் அரசியலை விடுத்து மக்கள் நலன்கருதி ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான களம் விரைந்து உருவாக்கப்பட வேண்டும்.
தீர்வு தொடர்பில் யாரும் முன்முனைப்பு எடுப்பார்கள். நாம் எதிர்வினையாற்றுவோம் என்ற வழக்கமான பல்லவியை விடுத்து நாம் ஒன்றுபட்டு சாத்தியமான மாற்றுத்திட்டங்களை வகுத்து இலங்கை அரசுடனும் சரி சர்வதேச சக்திகளுடனும் சரி இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள எம்மைத் தயார் செய்ய வேண்டும்.
-க.சர்வேஸ்வரன்-