இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் வெளிப்படையின்மை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதன் உள்ளடக்கம் இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் என்னென்ன விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய, எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியாவோ இலங்கையோ வெளியிடவில்லை.
இந்தியப் பிரதமர் நாடு திரும்பியதும், கடந்த 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உடன்பாடு குறித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவ்வாறான ஒரு விளக்கத்தை ஜனாதிபதி அளிக்கவில்லை. அதுபோல, இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
கடந்த காலங்களில், ஜே.வி.பி .அல்லது தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது, இந்தியாவுடன் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக, அரசாங்கங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்றும், உடன்பாட்டு நகலை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும் வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டது.
ஆனால், இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை பாராளுமன்றத்திலோ அல்லது பகிரங்கமாகவோ முன்வைக்கத் தயாராக இல்லை.
கடந்த வாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த உடன்பாட்டை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு இந்தியாவின் இணக்கப்பாடு தேவை எனக் கூறியிருந்தார்.
அப்படியானால், இது ஓர் இரகசிய உடன்பாடு என்றே கருத வேண்டும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே இதனை இரகசியமாக பேணுவது என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்தியாவுடன் இரகசியமான ஒரு உடன்பாட்டிற்குச் செல்கிறோம் எனத் தெரிந்து கொண்டே, இலங்கை அரசாங்கம் அதில் கையெழுத்திட்டிருக்கிறது.
இப்போதைக்கு பாராளுமன்றத்தில் இந்த உடன்பாட்டை சமர்ப்பிக்க முடியாது என்றும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வேண்டுமானால் அதன் முக்கிய விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபற்றி தகவல் கோரினால் அதன் பதில் என்னவாக இருக்கும் என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறான சூழலில், இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள, இந்த பாதுகாப்பு உடன்பாடு, இலங்கைக்கு சாதகமானதா இந்தியாவுக்கு சாதகமானதா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியா பிராந்திய அதிகாரப் போட்டியில் தனக்கு சார்பாக நாடுகளை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
குறிப்பாக இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் அது நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாகவே, இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடும் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புக்களை ஆவணப்படுத்தி இருக்கிறதே தவிர, புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.
அப்படியானால் ஏன் அதனை அரசாங்கம் இரகசியமாக மறைத்து வைக்க வேண்டும்?
இந்த உடன்பாட்டில், பாதுகாப்பு தளபாட உற்பத்திகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.
அது எந்தளவிற்கு ஆழமானது என்பது இன்னமும் விடை தெரியாத புதிராகவே இருந்தாலும், இந்த விடயம் சாதாரணமான ஒன்றாக இருக்காது.
நெருக்கடியான சூழ்நிலைகளின் போது இலங்கையில் இந்தியா, பாதுகாப்பு தளபாடங்களை சேமித்து வைக்கவும் இந்த உடன்பாட்டில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தியாவின் பாதுகாப்பு தளபாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பன வளர்ந்து வரும் ஒரு கைத்தொழிலாக மாறி இருக்கிறது.
கூடுதல் பாதுகாப்பு தளபாடங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது.
அவற்றில் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், இலகு ஹெலிகொப்டர்கள் மாத்திரமன்றி அதிநவீன ஏவுகணைகளும் உள்ளடங்கியிருக்கின்றன.
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன.
இலங்கையும் கூட இந்தியாவிடம் இருந்து ஆழ்கடல் ரோந்து கப்பல்களை பெற்றிருக்கிறது. டோனியர் கண்காணிப்பு விமானங்களையும் இந்தியா வழங்கி இருக்கிறது.
இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவினால் கொடையாக வழங்கப்பட்டவை.
ஆனால், நீண்டகாலத்திற்கு இந்தியா இவற்றை கொடையாக வழங்கிக் கொண்டிருக்க முடியாது.
இலங்கை தனது பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு விரும்பினால் இந்தியாவிடம் இருந்து பாதுகாப்பு தளபாடங்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதற்கு இந்த இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை வழிவகுக்கும் என தெரிகிறது.
இலங்கை விமானப்படையில் இருந்த எவ்-7, மிக், கிபிர் ரக போர் விமானங்களில் பயன்படுத்தும் காலம் காலாவதியாகக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எவ்- 17 போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தது.
நல்லாட்சி அரசின் காலத்தில், இந்தியா அதனை தடுத்து நிறுத்தியது.
அதற்குப் பதிலாக இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை இலங்கை விமானப்படை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களை கொள்வனவு செய்ய நல்லாட்சி அரசாங்கமோ, விமானப்படை அதிகாரிகளோ விரும்பவில்லை.
கோட்டாபய ராஜபக் ஷ பதவிக்கு வந்த பின்னர், இந்திய விமானங்களை கொள்வனவு செய்வதை விரும்பாமல், 50 மில்லியன் டொலர் செலவில், இஸ்ரேலில் ஏழு கிபிர் போர் விமானங்களை முழுமையாக மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் தேஜஸ் போர் விமானங்களை, இலங்கையின் தலையில் கட்டி விடும் முயற்சிகளுக்கான கதவு அடைக்கப்பட்டது.
ஆனால், தற்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும்.
அதேவேளை, இலங்கையின் கடற்பரப்பில் சீனாவின் ஆய்வு கப்பல்கள் தரித்துச் செல்வதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும் தடைவிதிப்பது தொடர்பான விடயங்களும், இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனை உறுதிப்படுத்துகின்ற எந்த ஒரு ஆவணங்களும் வெளிவரவில்லை.
இந்தச் சூழலில் இந்திய ஊடகங்கள் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தன.
இந்திய பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக – திருகோணமலையில் பாகிஸ்தான் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி நடத்த இலங்கை கடற்படை திட்டமிட்டிருந்தது என்றும், புதுடெல்லியினால் வெளியிடப்பட்ட எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் இதனை நிராகரித்திருக்கின்றன.
மார்ச் 6 ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்கப்பல் ஒன்று கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
அந்த போர்க்கப்பல் இலங்கை கடற்படையுடன் திட்டமிட்ட வழித்துணை பயிற்சியை முன்னெடுத்த படி மறுநாள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தது.
அது தவிர வேறு எந்த திட்ட மிடல்களும் இருந்திருக்கவில்லை என்றும், கூட்டுப் பயிற்சி எதுவும் இரத்து செய்யப்படவில்லை என்றும் இரண்டு நாடுகளும் கூறி இருக்கின்றன.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னரே, பாகிஸ்தானுடன் இணைந்து கூட்டு பயிற்சிகள், ஒத்துழைப்புக்களை முன்னெடுப்பதை இந்தியா தடுக்கக் கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்று விட்டது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் நோக்கிலேயே, அந்த செய்திகள் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரத்துக்கு பின்னால் இந்தியாவின் இன்னொரு மறைமுகச் செய்தி இருக்கிறது.
இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ள நிலையில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுப்பதை, இந்தியா கவலையுடன் நோக்கும் என்பதே அது.
இந்தியாவின் இந்தச் செய்தியை கொழும்பு புரிந்து கொண்டிருக்கும். இதனை ஒரு மறைமுக அழுத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஹரிகரன்