புத்தளம் – கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், அண்மையில் திருமணமான மற்றுமொரு யுவதியொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. புத்தளம் – கற்பிட்டி பகுதியை சேர்ந்த முஹம்மட் பரீன் (வயது 42) எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கற்பிட்டி வன்னிமுந்தல், முஹம்மதியா புரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா அப்சானா (வயது 22) எனும் திருமணமாகி 20 நாட்களேயான யுவதியே காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கலாஓயா ஆற்றின் நீர்மட்டம் ஒரே தடவையில் அதிகரித்துள்ளமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவம் இடம்பெற்ற நேற்று உயிரிழந்த நபர் தமது குடும்பம் மற்றும் உறவினர்கள் என 8 பேருடன் இந்திரப் படகு ஒன்றில் கற்பிட்டியில் இருந்து வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கேவாடி பகுதியிலுள்ள ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் மகளும், அவரின் உறவினர் முறையை சேர்ந்த 22 வயதுடைய அண்மையில் திருமணமான யுவதியும் ஆற்றுக்குள் நீராடிக் கொண்டிருந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இதன்போது, நீராடிக் கொண்டிருந்த குறித்த இளம் யுவதியை நீர் அடித்துச் செல்வதாக அங்கிருந்தவர்கள் கூக்குரலிட அதனை அவதானித்த தந்தை உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தனது மகளை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளார்.
இதனையடுத்து, தனது மகளோடு கூடவே இருந்து நீராடிக் கொண்டிருந்த அண்மையில் திருமணமான தனது உறவுமுறை யுவதியும் காணாமல் போயுள்ளமையை அவதானித்த அந்த குடும்பஸ்தர் மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் நீரில் மூழ்கிய குடும்பஸ்தரை மீட்டு, உடனடியாக வன்னாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.