இந்தியாவின், மேற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் இருந்து 15 கி.மி தொலைவில் உள்ளது ‘குல்தாரா’ (Kuldhara) கிராமம். ஆள் நடமாட்டம் எதுவுமில்லாத இந்த கிராமம் பற்றி, பல திகில் கதைகள் கூறப்படுகின்றன.
சுமார் 500 வருடங்களுக்கு மேலாக அங்கே கிட்டத்தட்ட 1500 கிராமவாசிகள் வசித்து வந்ததாகவும், தீடீரென ஒரு நாள், அங்கிருந்த அனைவரும் மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தான் குல்தாரா கிராமம் காலியானதாக அறியப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, குடிநீர் தட்டுபாடு, அதனால் ஏற்பட்ட பஞ்சம், பூகம்பம், தீய குணங்கள் நிறைந்த ஒருவரது கொடூரமான ஆட்சி போன்ற சில காரணங்கள் அழுத்தமாக காலங்கள் கடந்து இன்றளவிலும் கூறப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அந்த இடத்தை ஆண்டு தீயவன் ஒருவன், அந்த கிராமத்து தலைவரின் மகளை பார்த்து ஆசை கொண்டதாகவும், அவளை ஒப்படைக்க கிராம வாசிகளுக்கு கால கெடு கொடுத்ததாகவும் அப்படி ஒப்படைக்காத பட்சத்தில் அனைவரையும் நாசம் செய்து பெண்ணை கடத்தி செல்லப் போவதாகவும் சொல்லி இருந்தானாம்.
அதனால் இரவோடு இரவாக 84 கிராம தலைவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தார்களாம். அதன்படி அந்த கிராமதத்தை சபித்து விட்டு அனைவரும் அங்கிருந்து வேறொரு இடத்துக்கு, இடம்பெயர்ந்து விட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
மேலும், அதன் பின்னர் அங்கே யாரும் தங்க துணிவது இல்லையெனவும், காரணம் அங்கே தங்க முயன்ற சிலர் மர்மமாக மிகக் கொடூரமாக இறந்து போனார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கிடையே பலர், அங்கே ஆவிகள் வேட்டை ஆடுவதாகவும் சொல்கின்றார்கள். இன்றும் பாலைவனமாக குட்டிசுவராக யாரும் தங்க துணியாத ஒரு இடமாகவே உள்ளது இந்த திகில் கிராமம்.
இந்நிலையில், 2010ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநில அரசால் இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இங்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாழடைந்த கட்டிட சுவர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. கிழக்கு பகுதியில் வறண்டு போன ஆற்றின் கிளை வழி காண இயல்கிறது. மற்றும் மேற்கு பகுதி, கிராமத்தை பாதுகாக்கும் எல்லை சுவர்கள் கொண்டுள்ளன.
ஆய்வு சொல்வது என்ன?
2017ஆம் ஆண்டு ஏ.பி.ராய் என்பவர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கிடைக்கப்பட்ட தகவல் என்னவென்றால், குல்தாரா மற்றும் பாலிவால் மக்கள் வசித்து வந்த அக்கம்பக்கத்து கிராமங்கள் பூகம்பத்தின் காரணமாக அழிந்திருக்கலாம் என்பதே ஆகும்.
இந்த ஆய்வு மேற்கொண்ட ஆய்வாசிரியர்கள் அழிந்த கட்டிடங்களின் அமைப்பு வைத்து பார்க்கும் போது, அவற்றில் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் மூலம் ஏற்படும் தாக்கம் வீட்டு கூரைகள், தூண்கள் போன்றவற்றில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இத்தகைய தாக்கம், காலநிலை மாற்றம் அல்லது கட்டிட அரிப்பு போன்றவற்றால் ஏற்படும் வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.