1987ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையின் மூலம், வடமராட்சியைக் கைப்பற்றிய சில நாட்களில், இந்தியா ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
1987 ஜூன் 4ஆம் திகதி ‘ஒப்பரேசன் பூமாலை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, உதவிப் பொருட்களை வான்வழியாக வீசுகின்ற நடவடிக்கையே அது.
அன்று மாலை 3 மணிக்கு புதுடெல்லியில் இருந்த இலங்கைத் தூதுவர் பேனாட் குணதிலக, சவுத் புளொக்கில் இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டார்.
அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங், இன்னும் ஒரு மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் உதவிப் பொதிகளை வீசவுள்ள தகவலை பேனாட் குணதிலகவிடம், பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பணியை முடிக்க இலங்கை விமானப்படை தடையாக இருந்தால், மிராஜ் விமானங்கள் தமது பலத்தினால் அதனை முறியடிக்கும் என்ற தகவலும் அப்போது, பேனாட் குணதிலகவுக்கு சொல்லப்பட்டது.
அதையடுத்து, பிற்பகல் 3.55 மணியளவில் பெங்களூருவில் இருந்து இரண்டு அன்டடோவ் -32 விமானங்களும், தாம்பரத்தில் இருந்து இரண்டு அன்டடோவ் -32 விமானங்களும்- அரிசி, பால்மா, மரக்கறிகள் மற்றும் எண்ணெய் போன்ற தலா 25 தொன் அத்தியாவசியப் பொருட்களுடன் புறப்பட்டன.
அவற்றுக்குப் பாதுகாப்பாக, அப்போது இந்தியாவிடம் இருந்த அதிநவீன போர் விமானங்களான, ஐந்து மிராஜ்-2000 விமானங்கள் புறப்பட்டன.
மாலை 5 மணிக்கு யாழ். நகரத்திற்கு மேலாக பறந்த இந்திய விமானங்கள், 1500 அடி உயரத்திற்கு தாழப் பறந்து, உதவிப் பொதிகளை வீசின.
அவை யாழ். நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீற்றர் சுற்றளவுள்ள பகுதிக்குள் விழுந்தன.
அந்த விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக மாலை 6.18 மணிக்கு பெங்களூருவில் தரையிறங்கின.
இலங்கையில் இந்தியாவின் தலையீட்டுக்கான ஒரு முன்னோடி நடவடிக்கை தான் அது.
உண்மையில் இந்தியா உதவிப் பொருட்களை வடமராட்சியின் மீது தான் வீசியிருக்க வேண்டும். அதுவே அப்போதைய போர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதற்குப் பதிலாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின் மீதே இந்தியா உதவிப் பொதிகளை போட்டது. இந்த உதவிப்பொதிகள் போடப்பட்ட போது இலங்கை இராணுவமும் விமானப்படையும் செய்வதறியாமல் திகைத்துப் போயிருந்தன.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையே அது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இதற்கு தெற்கில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இலங்கையின் இறைமையை இந்தியா மீறி விட்டதாக குற்றம்சாட்டினார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜே.வி.பி. தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை தீவிரப்படுத்தியது.
இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தது.
இந்தியாவுக்கு எதிராக இந்தியர்களுக்கு எதிராக இந்திய பொருட்களுக்கு எதிராக -அது ஒரு பகிரங்கப் போரையே முன்னெடுத்தது.
ஒப்பரேசன் பூமாலையை வைத்து ஜே.வி.பி.யும் பிற கட்சிகளும் ஜே.ஆர். அரசாங்கத்துக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் போராட்டங்களை தீவிரப்படுத்திய சூழலில், 1987 ஜூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு வந்து இந்திய- – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டதும், மீண்டும் இந்திய போர் விமானங்களும், அன்டனோவ் போக்குவரத்து விமானங்களும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தரையிறங்கின.
அது இந்தியாவின் ஆழமான திட்டத்துடனான ஒரு தரையிறக்க நடவடிக்கை.
இதன்போதும், இலங்கையின் இறைமையை இந்தியா மீறி விட்டதாக குற்றம்சாட்டினார்கள்.
ஆனால். இந்தமுறை அப்படியல்ல – ஜே.ஆரின் ஒப்புதலுடன் தான் இந்தியப் படைகள் தரையிறங்கின.
அவர்கள் தனியானதொரு திட்டத்துடன் நீண்டகாலம் நிலைகொள்வதற்குத் தயாராக இருந்தனர்.
இந்தியப் படைகளை வெளியேற்ற ஜே.வி.பி. தெற்கில் ஆயுதப் போராட்டத்தை நடத்தியது.
வடக்கு, கிழக்கில் புலிகள் நேரடியான இந்தியப் படையினருடன் மோதினார்கள்.
இன்னொரு பக்கம், 1998இல் ஆட்சிக்கு வந்த பிரேமதாசவும் இந்தியப் படைகளை வெளியேற நெருக்கடிக்ளைக் கொடுத்தார்.
அதன் பின்னர் இந்தியா வேறு வழியின்றி தனது படைகளை திருப்பி அழைத்துக் கொண்டது.
2004 டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி பேரழிவை அடுத்து இந்தியா தனது படைகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியது.
சுனாமியைத் தொடர்ந்து, இலங்கை சர்வதேச உதவியைக் கோரிய போது, இந்தியா விரைவாக பதிலளித்தது.
பேரழிவு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் இந்திய கடற்படை மருத்துவக் குழு கொழும்புக்கு வந்தது.
இந்தியா மொத்தம் 14 கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களையும், கிட்டத்தட்ட 1,000 இராணுவத்தினர் மற்றும் பல டசின் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களையும் அனுப்பியது.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பது, உடல்களை மீட்பது, மருத்துவ உதவி வழங்குவது, உணவு மற்றும் பொருட்களை விமானத்தில் வீசுவது மற்றும் காலி, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை மதிப்பிடுவதில் இந்தியப் படைகள் ஈடுபட்டன.
ஆனால், 1987இல் இந்தியப்படைகள் உணவுப் பொதிகளை யாழ்ப்பாணத்தில் வீசிய போது- இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் வந்திறங்கிய போது தெற்கில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யாரும், சுனாமிக்குப் பின்னர் இந்தியப் படைகள் வந்திறங்கியதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை.
ஜே.வி.பி.யினர் கூட அடக்கியே வாசித்தனர். அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிகா அரசாங்கத்தில் அவர்களும் பங்காளிகளாக இருந்தனர்.
அதன் பின்னரான காலகட்டத்தில் இலங்கைக்கு முதலில் ஓடி வந்து உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.
2020இல் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா வக்சின் மைத்ரி என்ற பெயரில், மனிதாபிமான தடுப்பூசிகளை வழங்கியது.
அப்போதும் அதனை யாரும் எதிர்க்கவில்லை.
கோட்டாபய ராஜபக் ஷவின் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, இந்தியா உதவிகளை அள்ளி வழங்கியது.
அதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இப்போது ‘தித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட இந்தியா ‘சாகர் பந்து’ என்ற நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
புயல் தாக்கிய போது, கொழும்பு துறைமுகத்தில் தரிந்து நின்ற இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல் உதவிப் பொருட்களை வழங்கியதுடன் இரண்டு ஹெலிகொப்டர்களையும் தேடுதல் மீட்பு, உதவிப் பணிகளில் ஈடுபடுத்தியது.
1987ஆம் ஆண்டு ஒப்பரேசன் பூமாலைக்கான திட்டத்தை தயாரித்து, இரண்டு நாட்களுக்கு முன்னரே விமானங்களை பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அனுப்பி வைத்த – ஆக்ரா விமானப்படைத் தளம், சாகர் பந்து நடவடிக்கையிலும் தீவிர பங்கெடுக்கிறது.
அங்கிருந்து உதவிப் பொருட்களை மாத்திரம் இந்தியா அனுப்பவில்லை. உதவி மீட்புக்குழுவினரை அனுப்பியது.
முழு வசதிகளையும் கொண்ட இரண்டு நடமாடும் மருத்துவமனைகளையும், அவற்றுக்கான மருத்துவக் குழுவினரையும் அனுப்பியது.
கடற்படைக் கப்பல்களிலும், உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது.
ஒப்பரேசன் பூமாலைக்கு முன்னர், புதுடெல்லியில் இருந்த இந்தியத் தூதுவரை அழைத்து தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தமுறை இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைத் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியிருக்கிறார்.
இலங்கையின் மீட்சிக்கான உதவிகளை வழங்கத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக, நான்கு தசாப்தங்களுக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இப்போது இந்திய விமானங்கள் வருவதையோ, இந்தியப் படையினர் இங்கு மீட்பு தேடும் பணிகளில் ஈடுபடுவதையோ யாரும் எதிர்க்கவில்லை.
இறையாண்மையின் மீதான தாக்குதலாக எடுத்துக் கூறவில்லை. இது ஏன்?
அப்போது எதிர்த்த ஜே.வி.பி. இப்போது ஆட்சியில் இருக்கிறது என்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணம், அப்போது இந்திய விமானங்கள் வீசிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்காக வீசப்பட்டவை.
ஆனால், இப்போது இந்தியாவின் உதவிகள் பெரும்பாலும், தென்பகுதியை மையப்படுத்தியவை.
அதனால், இறையாண்மை பற்றிய அச்சங்கள் அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கிறது.
என்.கண்ணன்

