யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, உரிமையாளர் கடைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இந்தத் திருட்டுச் சம்பவத்தினால் தனது வாகனத்தை இழந்துள்ளார்.
கடந்த 11-ஆம் திகதி, அவசரத் தேவை நிமிர்த்தம் யாழ்ப்பாணம் நகருக்குச் சென்ற அவர், தனது BHU 3878 இலக்கமுடைய Pulsar ரக மோட்டார் சைக்கிளை ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியோரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடையொன்றில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

