யாழ்ப்பாணம், எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில், எதிர்வரும் 20-ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள காணி உரிமையாளரான தாயார் ஒருவர், தனது குடும்பச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தாயின் குமுறல்: “எமது பூர்வீகக் காணியை 1990-ஆம் ஆண்டு முதல் கடற்படையினர் வசப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். அங்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டி நாங்கள் வாழ்ந்து வந்தோம். சுமார் 30 வருடங்களாக எமது நிலத்தை மீளக் கோரி வருகிறோம். எனது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களைப் பராமரிக்கவே நான் பெரும் சிரமப்படுகிறேன். எனது மகளின் எதிர்காலத்திற்காக அவருக்குச் சீதனமாக வழங்க இருக்கும் ஒரே சொத்து இந்தக் காணி தான்,” என அத்தாயார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட கேள்வி: “மக்களின் காணிகள் மக்களுக்கே ஒப்படைக்கப்படும்” என ஜனாதிபதி கூறிவரும் நிலையில், எமது பூர்வீக நிலத்தை எமது அனுமதியின்றி கடற்படைக்குச் சுவீகரிக்க முயல்வது அவருக்குத் தெரியாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தித் தனது காணியை மீட்டுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply