யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றிய பெண், சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். புறநகர் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த நகைக்கடையில் நகைகளுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

திருட்டு அம்பலமானது எப்படி? சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, தனக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளதாகக் கூறி அப்பெண் பணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அண்மையில் கடையில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்தக் கணக்கெடுப்பின் போது, சுமார் 2 கிலோ கிராம் எடையுள்ள தங்க நகைகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிர்வாகத்தினர் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், பணியிலிருந்து விலகிய பெண் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

வாக்குமூலமும் கைதும்: பொலிஸார் அப்பெண்ணை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தான் பணியில் இருந்த காலத்தில் சிறிது சிறிதாக நகைகளைத் திருடி வந்ததாகவும், அவ்வாறு திருடிய நகைகளை அடகு வைத்தும், விற்றும் வந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், சில நகைகளைத் தனது வீட்டின் நிலத்திற்குள் புதைத்து வைத்துள்ளதாகவும் அவர் அளித்த வாக்குமூலம் பொலிஸாரையே அதிர வைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு: கைது செய்யப்பட்ட பெண்ணை நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 27-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். திருடப்பட்ட நகைகளை மீட்பதற்கும், இந்தத் திருட்டுச் சம்பவத்திற்கு உதவியாக இருந்த ஏனைய நபர்களைக் கைது செய்யவும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply