• இலங்கை அரசு சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன் பாலசிங்கம், சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார். ஆனாலும் அவ்வாறான நிலமையைத் தவிர்க்க ஏன் முயற்சிக்கவில்லை?
• புலிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட சக்திகள் இந்த நாடுகளின் ஆதரவைக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்ததும் புலிகளைத் தோற்கடிக்கும் சதிவலைகளின் சூழ்ச்சிகளா?
• இரு சாராருமே சர்வதேச ஈடுபாடு அதிகம் இருப்பதை விரும்பவில்லை.
தொடர்ந்து…..

Ian Martin
யப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவுகள் புலிகளுக்கும், அரசிற்கும் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை.
குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபையைச் சார்ந்த இயன் மார்டின் வழங்கிய அறிக்கையில் மனித உரிமை பேணப்படுவதைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதை புலிகள் கடுமையாக எதிர்த்தனர். பதிலாக இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்பினர் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டனர்.
இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இலங்கை அரசின் கீழ் உள்ள எந்த அமைப்பின் நடவடிக்கைகளிலும் நம்பிக்கை இல்லாத அவர்கள் மனித உரிமை அமைப்பை ஏற்றுக்கொண்டது ஒரு புறம் வியப்பை அளித்த போதும் அதில் காணப்படும் குறுகிய நோக்கத்தைப் பலரும் உணர்ந்தனர்.
இலங்கையின் மனித உரிமை அமைப்பு எந்தவித அதிகாரங்களும் அற்றது.
அது மட்டுமல்லாமல் கண்காணிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த அமைப்பாகவும் இருக்கவில்லை.
இது பலவிதத்திலும் தமக்கு வாய்ப்பானது எனவும், தம்மால் தப்பிக்க முடியும் எனவும் அவர்கள் கருதினர். அத்துடன் அரச தரப்பினரும் இதில் உடன்பட்டுச் செல்வது கவனிக்கத்தக்கது.
இரு சாராருமே சர்வதேச ஈடுபாடு அதிகம் இருப்பதை விரும்பவில்லை.
ஆனால் சர்வதேச ஈடுபாட்டினை ஒரே ஒருவர் மட்டுமே விரும்பினார். அவர் வேறுயாருமல்ல. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் ஆகும்.
அப்போதைய ரணில் அரசு இப் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலேயே கவனத்தைச் செலுத்தினர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக அப்போதைய சமாதானச் செயலக அதிகாரியான பேர்னார்ட் குணதிலக தெரிவிக்கையில்,
ஒஸ்லோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில அம்சங்கள் குறித்து நாம் பேசலாமா? என தான் பாலசிங்கத்தைக் கேட்டபோதுஅதற்குத் தனக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்த, இரண்டு கைகளாலும் தனது தொண்டையை மறைத்து அவ்வாறு பேசினால் தனது கதி அதுவாகும் எனச் சைகை காட்டியதாக கூறுகிறார்.
யப்பான் சந்திப்பினைத் தொடர்ந்து அமெரிக்காவில் இலங்கைக்கு உதவியளிக்கும் நாடுகளின் சந்திப்பு 2003ம் ஆண்டு ஏப்ரல் 14ம் 15ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சந்திப்பிற்கு விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்திருந்ததால் அழைப்பு அனுப்பப்படவில்லை. புலிகள் தமக்கு அமெரிக்கா அழைப்பு அனுப்பும். அதன் மூலம் தடைகள் எடுக்கப்பட வாய்ப்பு உண்டு என எதிர்பார்த்து ஏமாந்தனர்.

Richard Armitage
இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அப்போதைய உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் புலிகளுக்கு ஓர் செய்தியை அங்கு தெரிவித்தார்.
புலிகளின் தற்போதைய போக்குக் குறித்து தாம் ஒரளவு திருப்தி அடைவதாகவும், இருப்பினும் அவர்கள் பயங்கரவாதத்தினைக் கைவிடுவதாக சொல்லிலும், செயலிலும் காட்டவேண்டுமெனவும், அவ்வாறான மாற்றம் ஏற்படின் தாம் பயங்கரவாத தடைப் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு இலங்கை அரசின் குழுவிற்குத் தலைமைதாங்கிச் சென்ற அமைச்சர் மிலிந்த மொறகொட தனது உரையில்…. “இரு தரப்பாரும் நிரந்தர அரசியல் தீர்வுகளை சமஷ்டி வடிவத்திற்குள் அதிகார பரவலாக்க அடிப்படையில் தீர்ப்பதற்கான வழிவகைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
இலங்கை அரசு தரப்பினர் பேச்சுவார்த்தைகள் ஓரளவு முன்னேறி வருவதாக கூறி உதவி வழங்கும் நாடுகளை நம்ப வைக்க பலத்த முயற்சிகள் எடுத்தனர்.
அவர்களைப் பொறுத்தமட்டில் உதவிகளைப் பெறுவதன் மூலம் ஆட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் தாம் அடுத்து எடுக்கவுள்ள திட்டங்களை அங்கு அறிவித்தனர்.
• சுமார் 10 லட்சம் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செயலிழக்கச் செய்வது.
• பாதிக்கப்பட்டுள்ள நகரங்கள், கிராமங்களைப் புனரமைப்பது.
• உள் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள 10 லட்சம் அகதிகளுக்கான இருப்பிடங்கள், விவசாய உபகரணங்களை வழங்குதல்.
• போரினாலும், போதிய வசதி இல்லாமையாலும் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைப் புனரமைப்பது.
• நாடு முழுவதும் வாழும் மக்கள் அச்சமில்லாமல் தமது வேலைகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துதல்.
அங்கு சமூகமளித்திருந்த உதவி அளிக்கும் நாடுகள் பல பேச்சுவார்த்தைகளின் முடிவுகளிலேயே தமது உதவிகள் தங்கியிருப்பதை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க அங்கு உடன்பாடு காணப்பட்டது.
அமெரிக்க உதவிகளைப் பெறுவது இலங்கைக்கு எவ்வாறு பயனுள்ளது? என்பது குறித்து தெரிவிக்கையில்..,

மிலிந்த மொறகொட
அமெரிக்கா போன்ற நாடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதால் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையாமல் பாதுகாப்பதற்கான வலையாக அது அமையும் என்பது மிலிந்த மொறகொட இன் அபிப்பிராயமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் அமெரிக்கா தமக்குப் பின்னால் இருப்பதாக இலங்கை மக்களுக்கு குறிப்பாக சிங்கள மக்களுக்க நம்பிக்கை கொடுப்பதும் தேவையாக இருந்தது.

அமெரிக்க சம்பவங்கள் புலிகள் தரப்பில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?என்பதை தாம் அப்போது விளங்கிக்கொள்ளவில்லை என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.
அதன் பின்னர் அதாவது.., புலிகள் அமெரிக்காவிற்கு அழைக்கப்படாதது, அமெரிக்க அமைச்சரின் உரை போன்றன புலிகள் தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
தாம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளதாக புலிகள் அறிவித்தனர்.
இப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒதுங்குவதற்கான வேளையை அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இவை அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்ததாக சோல்கெய்ம் கூறுகிறார்.
இந்த முடிவுக்குச் செல்வதற்கு தொடர்ச்சியாக இடம்பெற்ற பல சம்பவங்கள் காரணமாக அமைந்தன. ஆனால் அவை தனது கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.
சர்வதேச சமூகத்தினால் தான் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரபாகரன் உணர்ந்ததாகவும், அமெரிக்க சம்பவங்கள் அதனை எடுத்துக் காட்டியதாக அவர்கள் கருதினர்.
புலம்பெயர் தமிழர்களும் சமஷ்டி அரசியல் தீர்வில் பலத்த சந்தேகங்களை வெளிப்படுத்தியதாகவும், நாம் பேச்வார்த்தைகளை முறிக்கவில்லை, ஒத்திப் போட்டுள்ளோம் என பாலசிங்கம் விளக்கியதாகவும் சோல்கெய்ம் கூறுகிறார்.
அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தைகள் குறித்து பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்ததாகவும் குறிப்பாக ராணுவ தயாரிப்புத் தொடர்பாக இருந்ததாகவும், ரணில் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் செலுத்தியதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிடுகிறார்.
புலிகள் ஓர் ராணுவ அமைப்பு என்பதால் நோர்வேயின் பணி மட்டும் போதாது. பலமான நாடுகளான அமெரிக்கா, யப்பான் என்பனவும் இதில் இணைவது அவசியம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
இந்தியாவிற்கு அவ்வப்போது நிலமைகளை விளக்கி வந்த நிலையில் அவர்கள் அதனை ஆதரித்த போதும் 1987 அனுபவங்கள் நேரடியாக தலையிடுவதை தடுத்து வந்தன.
அமெரிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்த நிலையில் மூதூரில் தமிழ்- முஸ்லீம் தாக்குதல்கள் ஆரம்பித்தன.
யூன் மாதத்தில் யப்பானில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கல்ந்து கொள்ள சம்மதித்திருந்த புலிகள் தற்போது பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதால் யப்பான் மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தனர்
இம் முடிவு பல தொடர்ச்சியான காரணிகளின் விளைவாக காணப்பட்டது. யப்பானில் இடம்பெற்ற மாநாட்டில் அரச தரப்பினரும், அனுசரணையாளர்களும் அரசியல் தீர்வை அடைவதில் காட்டிய தீவிரத்தினை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளில் காட்டவில்லை.
இதன் விளைவாக போரை விரிவடையாமல் தடுப்பது, வாழ்வினை சுமுக நிலைக்கு எடுத்துச் செல்வது என்ற நோக்கங்கள் புனர்வாழ்வு, மீள்குடியமர்வு விடயங்கள் நடைபெறாததால் தோல்வி அடைந்ததாக பாலசிங்கம் கருதினார்.
அடுத்தது., சர்வதேச உதவிகளை நாடிய அரசின் முயற்சிகள் தெற்கின் பொருளாதாரத்தைக் கட்டுவது, சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிவித்த பாலசிங்கம் சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.
பேச்சுவார்த்தைகளில் படிப்படியாக சர்வதேச நாடுகள் ஈடுபடுவது குறித்து தனது அச்சத்தை வெளியிட்ட பாலசிங்கம், இலங்கைக்கு உதவி வழங்குவது என்ற போர்வையில் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி அரசைப் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான பலத்தின் சமநிலையைக் குலைக்க திட்டமிடுவதால் இச் சூழ்ச்சியிலிருந்து புலிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட சக்திகள் இந்த நாடுகளின் ஆதரவைக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்ததும் புலிகளைத் தோற்கடிக்கும் சதிவலைகளின் சூழ்ச்சிகளா? என எண்ணத் தோன்றுகிறது.
ஒரு புறத்தில் சிங்கள தீவிரவாத சக்திகள் அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்ட, மறு புறத்தில் இலங்கை அரசைப் பலப்படுத்தி ராணுவச் சமநிலையைக் குலைக்க மேற்குலக நாடுகள் சூழ்ச்சி செய்வதாக புலிகள் குற்றம் சுமத்துவது ஓர் பொதுவான போக்கை அடையாளப்படுத்துகிறது.
இரு பக்கத்திலுமுள்ள தீவிரவாத சக்திகள் அந்நிய நாடுகள் இப் பிரச்சனையில் தலையிடுவதை விரும்பவில்லை என்பதாகும். அதன் விளைவு தான் இன்றைய அனுபவங்களா?
தொடரும்
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.
தொகுப்பு : வி. சிவலிங்கம்

