யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கிப் பயணித்த “யாழ் ராணி” புகையிரதத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போதே குறித்த முதியவர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த முதியவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவரது சடலம் மீட்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காகவும் உடற்கூற்று பரிசோதனைக்காகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புகையிரத பாதைகளை கடக்கும் போதும், அதற்கு அருகாமையில் நடக்கும் போதும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

