உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார்.
பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் ‘இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என்று கூறினார்.
டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும்.
ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது.

