திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை 7 மணி நேரத்தில் கைது செய்த போலீசார், குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண்ணின் வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
எஜமான் படத்தில் மீனா போல் குழந்தை கருவிலேயே கலைந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக கூறி வீட்டினரை ஏமாற்றி வந்ததும், வளைகாப்பு நடந்து மூன்றாவது மாதத்தில் குழந்தை பிறக்கவில்லையா? எனக் கேட்டபோதுதான் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை கடத்தியதாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு உறுதுணையாக அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பிரிவில், சிகிச்சைக்காக வந்த மீனாட்சி என்பவர் சுகன்யாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அவ்வப்போது சுகன்யாவிற்கு மீனாட்சி உதவி செய்துள்ளார்.
திருச்சி குழந்தை கடத்தல்
இந்த நிலையில் இன்று காலை பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என சுகன்யா, மீனாட்சியிடம் கூறியுள்ளார்.
அப்போது மீனாட்சி நான் சென்று தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மீனாட்சி திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா மருத்துவமனையில் தேடி உள்ளார்.
ஆனால் அந்த பெண்ணையும் குழந்தையும் காணவில்லை இது குறித்து சுகன்யா பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார்.
எல்லோரும் குழந்தையை நீண்ட நேரமாக தேடினர். குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை.
மருத்துவமனை கடத்தல்
இதனைத் தொடர்ந்து குழந்தை காணாமல் போனதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மருத்துவமனையில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். சுகன்யாவின் உறவினர்களுடன் அரசு மருத்துவமனை முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
மீனாட்சி என்கிற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் திட்டமிட்டு குழந்தையை கடத்த வேண்டும் என அந்தப் பெண் சுகன்யாவிடம் பழகி இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்தனர்.
மீனாட்சி கைது
விசாரணையில் மீனாட்சி சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை தன்னுடைய பெற்றோரிடம் விட்டுவிட்டு கணவரை விட்டு விட்டு பிரிந்து வேறு சில நபர்களிடம் மீனாட்சி பழகி வந்துள்ளார்.
தற்பொழுது சுரேஷ் என்பவரை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சுரேஷுடன் திருமணம் நடைபெற்ற பின்பு மீனாட்சி கர்ப்பம் அடைந்துள்ளார்.
குழந்தை மீட்பு
ஆனால் மூன்று மாதத்திலேயே அவருக்கு கரு கலைந்துள்ளது. கரு கலைந்தது தன்னுடைய கணவரான சுரேஷிற்கும் அவருடைய வீட்டிற்கும் தெரிந்தால் தன்னை கண்டிப்பார்கள் என்கிற பயத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும், அவருக்கு வளைகாப்பும் நடந்துள்ளது. இந்த நிலையில் தான் ஏதாவது குழந்தையை கடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சுகன்யாவிடம் அறிமுகமாகி தானும் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி பேசியுள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனை மேலும் சுகன்யாவிற்கு உதவி செய்வது போல் நடித்து அவரிடமிருந்து குழந்தையை கடத்தி சென்று தன்னுடைய குடும்பத்தினரும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் போலீசார் மீனாட்சி இருக்கும் இடம் தெரிந்து சேலம் தம்மம்பட்டி அருகே அவரை சென்று கைது செய்தனர் இதனால் சுரேஷ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீனாட்சி வைத்திருந்த சுகன்யாவின் குழந்தையையும் போலீசார் பத்திரமாக மீட்டு மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மீனாட்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

