தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே தொடர்ந்து அனுப்பி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

அதிலும் வெறும் 30 நிமிடங்களில் மூன்று எச்சரிக்கைகளை அவர் விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா, அதை ஈரான் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அணுசக்திப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பதற்றத்தைத் தணிப்பதே இதன் நோக்கமாகும்.

 30 நிமிடங்களில் 3

முறை இந்த சூழலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவையும் டிரம்பையும் எச்சரிக்கும் வகையில் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு, அணு ஆயுத டீலை கையெழுத்திட ஈரான் ஆர்வமாக இருப்பதாகவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதனால் இந்த பிரச்சினை இத்தோடு முடிவுக்கு வரும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக கமேனியிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது.

அதிலும் ஒரு முறை இல்லை.. வெறும் 30 நிமிடங்களுக்குள் 3 முறை அவர் நேரடியாகவே டிரம்ப்பை எச்சரித்துள்ளார்.

டிரம்ப்பிற்கு எச்சரிக்கை

அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் கடுமையாகச் சாடிய கமேனி, ஈரானுக்கு அருகே அமெரிக்க ராணுவம் குவிக்கப்படுவதைப் பற்றி கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்தார்.

இது தொடர்பாக கமேனி தனது ட்விட்டரில், “47 ஆண்டுகளாக இஸ்லாமியக் குடியரசை அகற்ற அமெரிக்காவால் முடியவில்லை என்று அமெரிக்க அதிபர் (டிரம்ப்) கூறியுள்ளார்.

இதுவே ஒரு நல்ல ஒப்புதல் வாக்குமூலம் தான். (உங்களுக்கு முன்பு அதிபராக இருந்தவர்களை போலவே) உங்களாலும் ஈரானை வீழ்த்த முடியாது” என்றார்.

அமெரிக்காவால் முடியாது

சிறிது நேரத்தில் மற்றொரு ட்வீட்டில், “உலகிலேயே வலிமையான ராணுவ சக்தி தங்களிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவருகிறார்.

அந்த வலிமையான படை கூட சில சமயங்களில் மீண்டும் எழ முடியாத அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்படலாம்” என எச்சரித்தார்.

சில நிமிடங்களுக்குள் மீண்டும் அவர், “ஈரான் நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக அமெரிக்க தொடர்ந்து கூறுகிறது. போர்க்கப்பல் ஆபத்தான ராணுவ உபகரணம் தான்.

ஆனால், அதைவிட ஆபத்தானது, அந்தக் கப்பலைக் கடலுக்குள் அனுப்பக்கூடிய ஆயுதம்” என்றும் எச்சரித்துள்ளார்.

 

அமெரிக்கா ஈரான் பதற்றம்

தனது இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை ஈரானுக்கு அருகே அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டார். மேலும், சில கூடுதல் அமெரிக்கப் படைகளைக் குவிக்கவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஈரானுக்கு அருகில் இருப்பது சாட்டிலைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல உலகின் பெரிய போர்க்கப்பலான USS ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் சில வாரங்களில் ஈரான் அருகே வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, சர்வதேச அளவில் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் கடற்படைப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

இரு நாடுகளுமே மாறி மாறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அமைதி பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையிலேயே இருப்பதாகச் சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply