தவலம – உடுகம வீதியில் தவலம சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்து ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அதில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் காலி – தலங்கல்ல பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

