வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் நிர்வாகி ஒருவர்,
இன்று நடைபெறும் பல்கலைக்கழக செய்முறை தேர்வுக்கு (Practical) செல்லாமல் விஜய்யை பார்க்க வந்துவிட்டதாக கூறி அதிர்ச்சியை கொடுத்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில் தவெக சார்பிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பொதுக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். நிறைய பேர் பேரிகாடை தாண்டியும் அடியில் இருக்கும் கேப்பில் ஊர்ந்தும் உள்ளே சென்றனர்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் வெயிலால் ஒருவர் பலியான சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்த வேலூர் கூட்டத்தில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.
அது போல் வந்தவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தண்ணீர் பாட்டில், லெமன் ஜூஸ், பிஸ்கட் பாக்கெட், மிக்ஸர் பாக்கெட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் விஜய்யை பார்த்த பெண்கள் ஆரவாரம் செய்தனர். இந்த கூட்டத்தில் விஜய்யை பார்க்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், நான் முதலாமாண்டு B.Sc zoology படித்து வருகிறேன்.
இன்று எனக்கு போர்டு பிராக்டிக்கல் நடைபெறுகிறது. நான் அந்த தேர்வை எழுதாமல் விஜய்யை பார்க்க வந்துவிட்டேன்.
அந்த மார்க்கும் எனக்கு வேணாம். பிராக்டிக்கலை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
ஆனால் விஜய்யை இன்றுவிட்டால் என்னால் எப்போதும் பார்க்க முடியாது என கூறி அந்த பெண் அதிர்ச்சியை கிளப்பினார்.
மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்கள் கூறியிருப்பதாவது: விஜய்யை நாங்கள் இதுவரை நேரில் பார்த்தது இல்லை.
அவரை முதல் முறையாக பார்த்து பூரித்து போனோம். அரசியலில் விஜய் நிறைய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக இலவசங்களை பற்றிய அறிவிப்புகள் இல்லாமல் அவர் அரசியல் செய்ய வேண்டும். எங்கள் பணத்தையே எடுத்து எங்களிடம் கொடுக்கிறார்கள்.
அந்த அரசியல் தேவை இல்லை. வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்தி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளார்.
ஜெயலலிதாவும் நடிகையாக இருந்துதான் அரசியலுக்கு வந்து சாதனைகளை புரிந்தார். அது போல் விஜய்யும் நடிகராக இருந்து அரசியலுக்கு வருவதில் தவறில்லை.
விஜய் வளர்ச்சியை பார்த்து நிறைய பேருக்கு பொறாமை. விஜய் வரக் கூடாதுன்னு நிறைய சதி பண்றாங்க..
ஆனால் நிச்சயமா அவர்தான் ஆட்சிக்கு வருவாரு. அவர் மக்களுக்கு செய்வாருன்னு நம்பிக்கை இருக்கு. பெண்கள் சப்போர்ட் புல்லா அவருக்குதான். வரும் தேர்தலில் விஜய்தான் சிஎம். இத்தனை ரிஸ்க் எடுத்து விஜய்யை பார்க்க வரவங்கலாம்,
ரிஸ்கே இல்லாம ஒரு பட்டனை அழுத்த மாட்டாங்களா..? நிச்சயமாக வரும் தேர்தலில் விஜய் ஜெயிப்பார் என பெண்கள் தெரிவித்தனர்.

