கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெயர் மாற்றத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் அரசியலமைப்பில் 3-ஆம் பிரிவின் கீழ் கேரள சட்டப்பேரவைக்கு அதன் கருத்தைப் பெற மசோதா ஒன்றை அனுப்புவார்.
மாநில சட்டப்பேரவையின் கருத்தைப் பெற்ற பிறகு இந்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்த குடியரசுத் தலைவரின் பரிந்துரை பெறப்படும். இந்த மசோதா ‘கேரளாவின்’ பெயரை கேரளம் என மாற்றும்.
பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவிற்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 24-இல் கேரள சட்டப்பேரவை இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.

