அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப் புயலைத் தொடர்ந்து நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி முதல் தாக்கம் செலுத்தும் புயலால் சுமார் 4 லட்சம் வீடுகள் மின்சாரம் இழந்ததுடன், ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து அல்லது தாமதமானது.

மாநிலங்களின் பல பகுதிகளில் 60 சென்டி மீட்டருக்கு மேல் பனிப்புயல் பதிவான நிலையில், சாலைகள் மீண்டும் பனியால் மூடப்பட்டதால் பயணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நியூஜெர்சியில் அவசியமற்ற வாகனங்களுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டு பின்னர் நீட்டிக்கப்பட்டது. நியூயார்க் நகரிலும் அவசரநிலை அறிவித்து பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அமெரிக்க பனிப்புயல்எக்ஸ் தளம்

ரயில், பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், லாங்ஐலண்ட் ரயில் ரோடு முழுமையாக மூடப்பட்டது.

பள்ளிகள் தொலைநிலை வகுப்புகளுக்கு மாறியுள்ளன; மின்சாரம் மற்றும் சேவைகள் மீட்பு பல நாட்கள் எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில பகுதிகளில் 76.2 சென்டி மீட்டர் வரை பனிப்புயல் பதிவாகி, கோடிக்கணக்கான மக்களின் பயணம் முடங்கியது.

நியூயார்க் சென்ட்ரல் பார்க், போஸ்டன், பிலடெல்பியா, ரோட்ஐலண்டின் பிராவிடென்ஸில் அதிகமான பனி பதிவானது.

மணிக்கு 64-100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் பல அடி உயர பனிக்குவியல்கள் உருவாகின. குறைந்தது ஏழு மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

 

 

Share.
Leave A Reply